வன்னியர் இட ஒதுக்கீடு... இரண்டில் ஒன்று பார்த்துவிடத் தயார்... உறுதியாக நிற்கும் ராமதாஸ்..!
சென்னை: வன்னியர் சமுதாயத்துக்கு 20% இட ஒதுக்கீடு கோரி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிலிருந்து எள்ளளவும் பின் வாங்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.
வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு பெற வேண்டி பல ஆண்டுகாலமாக ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார்.
அது பற்றிய ஒரு சிறிய பின்னணி தொகுப்பை இங்கே பார்க்கலாம்;
வன்னியர் சமுதாயம்
1980-ம் ஆண்டு கால கட்டத்தில் வன்னியர் சமுதாயத்துக்காக இயங்கி வந்த பல்வேறு அமைப்புகளையும் ஒற்றை குடையின் கீழ் திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார் மருத்துவர் ராமதாஸ். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். சுமார் இருபத்து எட்டு அமைப்புகளை ஒன்றிணைத்து 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு கால கட்டத்தில் வன்னியர் சமுதாயத்துக்காக இயங்கி வந்த பல்வேறு அமைப்புகளையும் ஒற்றை குடையின் கீழ் திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார் மருத்துவர் ராமதாஸ். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். சுமார் இருபத்து எட்டு அமைப்புகளை ஒன்றிணைத்து 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது.
பொதுக்கூட்டங்கள்
மருத்துவப் பணியுடன் சேர்த்து போராட்டம், மாநாடு, பொதுக்கூட்டங்கள் என நடத்தி வன்னியர் சங்கத்தையும் வளர்த்தெடுத்தார் ராமதாஸ். இது மட்டுமல்லாமல் பிரச்சாரத்துக்காக கனல் என்ற பத்திரிகையும் அந்தக் காலக் கட்டத்தில் தொடங்கப்பட்டது. 20% இட ஒதுக்கீடு கோரி உண்ணாவிரதம், பேரணி, அரசுக்கு கடிதம் என வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டிற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
சாலை மறியல்
ஆனால் அப்போதைய அரசு வன்னியர் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்த ராமதாஸ் எங்களை மதிக்காதவர்களை மிதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என கர்ஜித்தார். இதனிடையே இந்த விவகாரத்தை தேசியளவிலான கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது வன்னியர் சங்கம்.
ஒரு வாரம்
1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் தொடங்கியது. வட மாவட்டங்களை உலுக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
துப்பாக்கிச்சூடு
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை களத்தில் இறக்கப்பட்டனர். இதனிடையே சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முணியன், முத்து, தாண்டவராயன், கோலியனூர் கோவிந்தன், ஓரத்தூர் ஜெகன்நாதன், வெளியம்பாக்கம் ராமகிருஷ்ணன், குருவிமலை முனுசாமி, தேசிங்கு, என பலர் போலீஸ் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக பலியாகினர்.
அறிக்கை வெளியானது
இதனால் இந்த விவகாரம் இன்னும் உக்கிரமானது. எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த ப.உ.சண்முகம், வி.வி.சுவாமிநாதன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட வன்னியர் சங்கம் இரண்டு கோடி வன்னிய மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா எனக் கேள்வி எழுப்பியது.
அழைத்து பேச்சு
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் எம்.ஜி.ஆர் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை வருகிறார் என்றும் அப்போது உங்களை அழைத்து அவர் பேசுவார் எனவும் அவரது செயலாளர் பரமசிவம் அறிவிப்பு வெளியிட்டார். இது நிலைமையை ஓரளவு சுமூகமாக்கியது. பிறகு சொன்னபடி வன்னியர் சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் எம்.ஜி.ஆர்.
வன்னியர் நல வாரியம்
அப்போது ஒன்பது பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார் ராமதாஸ். அதில் இட ஒதுக்கீடு தொடங்கி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும், என 12 கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்தார். இந்த சம்பவங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். மறைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடந்தவை.
20% இட ஒதுக்கீடு
எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற ஜானகியிடமும் இந்த கோரிக்கையை சுட்டிக்காட்டினார் ராமதாஸ். ஆனால் சில தினங்களில் ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. பிறகு 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது. அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், வன்னியர் சமுதாயம் உட்பட இதர சாதிகளையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு என்ற முடிவு எட்டப்பட்டது.
ஏமாற்று வித்தை
ஆனால் இதில் ராமதாசுக்கு உடன்பாடில்லை. இது ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என சாடிய அவர், 10 % கொடுத்தாலும் வன்னியர்களுக்கு என்று தனியாக கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் என்றார். இப்படி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியர் சமுதாயத்துக்கு 20% இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்னவாகும் இருக்கும் என்பதை அறிய தமிழக அரசியல் களம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.