நாடு முழுக்க பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்.. சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை
சென்னை: நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் உலகம் முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் நாட்டை துறந்து, உற்றார் உறவினர்களையும் துறந்து தொடர்ந்து ஆட்சியாளர்களின் கடும் நெருக்கடிக்கு ஆளாகிய பிறகும் தனது கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றவர் இப்ராஹீம். எனவே இன்றைய தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பிறை தெரிவதை ஒட்டி பக்ரீத் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் தமிழகம் உட்பட நாடு முழுக்க இன்று வழக்கமான உற்சாகத்துடன்பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வந்திருந்தனர். மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இஸ்லாமியர்கள் வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கட்டி தழுவாமல் சமூக இடைவெளிவிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டிருந்தது. இதன்படி வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து ஏழை எளியவர்களுக்கு மாமிசங்களை பங்கிட்டு கொடுத்து, உற்சாகமாக பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.
Recommended Video
நான் தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோவோ கைப்பாவையோ இல்லை..... குஷ்புவும் சர்ச்சை ட்வீட்களும்