'லா நினா'..குறைந்த வடகிழக்கு பருவமழை..நீடிக்கும் உறைபனி..இனி வறண்ட வானிலைதான்!
சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 58 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய கடற்பகுதியில் நிலவும் லா நினா வெப்ப அதிகரிப்பு சூழ்நிலையே முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு பருவமழை குறைய காரணம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே கொட்டி தீர்த்தது. வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட நாளை விட தாமதமாகவே தொடங்கியது. அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 13ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
வழக்கமாக டிசம்பர் மாதம் வரை பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். நடப்பாண்டு நவம்பர் மாதத்துடன் மழை குறைந்து போனது. ஒரு புயல் அதுவும் சென்னைக்கு அருகே கரையை கடந்தாலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 58 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 51 சதவிகிதம் அதிகமாக மொத்தம் 79 செமீ பெய்திருந்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பருடன் வடகிழக்கு பருவமழை 45 செமீ அளவு பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 1 செமீ அதிகம்தான் என்றாலும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பருவமழை அளவு குறைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை குறைய இந்திய கடற்பகுதிகளில் நிலவும் லா நினா என்ற வெப்பம் அதிகரிக்கும் பகுதியே காரணம் என பாலச்சந்திரன் கூறியுள்ளார். காற்றின் திசை மாற்றங்களால் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை வடகிழக்கு மாநிலத்திலும் மற்றொன்று கடலியே பெய்து விட்டது. இதனால் தமிழகத்தில் பருவமழை குறைந்து விட்டது.தமிழகத்தில் பனியின் தாக்கம் முன்கூட்டியே அதிகரித்து விட்டதும் மழை குறைய காரணம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22 மற்றும் 23ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என வானிலை மையம் தெரிவித்துள்ளது.