"கேமிரா காதலன்" பாலுமகேந்திரா.. தீட்டிய ஓவியங்கள்.. அத்தனையும் அழியாத கோலங்கள்.. மனசெல்லாம் மூடுபனி!
பாலுமகேந்திராவின் நினைவு நாளினை ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர்
சென்னை: கவிதையை காகிதத்தில் மட்டும் எழுத முடியுமா? ஏன் வெள்ளித்திரையிலும் எழுதலாமே.. சிற்பத்தை கல்லில் மட்டும் செதுக்க முடியுமா? ஏன்? கேமிராவிலும் செதுக்கலாமே? என்று நிரூபித்தவர்தான் பாலுமகேந்திரா!! இன்று அவரது நினைவு நாள்!
கேமிராவின் காதலன்... ஆம்.. இவரை அப்படித்தான் சொல்ல முடியும்!! இந்திய திரையுலகின் 70'களின் மத்தியில் அபாரமான வரவுதான் பாலுமகேந்திரா.. நல்ல அறிவாளி.. புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர்!
கன்னட திரையுலகம் இவரை, முதலில் ஆரத்தழுவி வரவேற்று கொண்டது.. "கோகிலா" இதுதான் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம்.. இவருக்கு மட்டுமல்ல.. பலருக்கு "முதல்" என்ற பட்டத்தை தாங்கி வந்தது கோகிலா.. மோகன், கமல், ஷோபா என அறிமுகங்கள் கன்னட உலகை திரும்பி பார்க்க வைத்தது.. இந்த படம் மொழி மாற்றம் செய்து, தமிழிலும் 100 நாள் ஓடியது.. மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட படங்களில் கோகிலாவின் வெற்றியை இன்றுவரை யாராலுமே முறியடிக்க முடியவில்லை என்பதே இதன் சாதனை.
விமானத்தை போல்.. ரயிலில் அதிக லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.. தேஜஸ் ரயிலில் அறிமுகம்
அழியாத கோலங்கள்
"அழியாத கோலங்கள்" இவரது அழகியல் பார்வைக்கு அழியாத புகழை கொண்டு வந்தது.. கதை ஒன்றும் பெரிசாக இல்லை.. நான்கைந்து வாண்டுகள்.. அதில் ஒரு வாண்டு, டீச்சரை சுற்றி சுற்றி வந்து மையல் கொள்வான்.. இதுதான் கதை.. ஆனால், ஒரு வெள்ளை துணியின் மீது கேமிராவையே தூரிகையாக்கி... உருவங்களையே எழுத்துக்களாக்கி.. நவீன கவிதையை எழுதியவர் பாலுமகேந்திரா!
மனித நேயம்
ஆனால் மக்கள் மனசில் உசரத்தில் நின்றது என்னவோ "மூன்றாம் பிறை".. என்னே ஒரு அழகியல்.. என்னே ஒரு இயற்கை காட்சிகள்.. கேமிரா கோணங்களை இப்படி வைத்தால், அழகியலை அலேக்காக அள்ளி கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் காட்டினார்.. திரும்பவும் கமல் - ஸ்ரீதேவி இப்படி நடிக்க முடியுமா என்று கேள்வியை எழுப்பிய படம் இது.. நேஷனல் விருது தந்து தமிழனை நெஞ்சுயர்த்தி பார்த்த படம்.. இதில் கமல் ஒரு ஹீரோதான்.. ஆனால் கட்டிப்பிடித்து டூயட் பாடவில்லை..பண்பாடு நிறைந்த ஹீரோ.. பக்குவம், முதிர்ச்சி, மனிதநேயம், ஆழ்ந்த காதல் கொண்ட மகத்தான ஹீரோ.. தமிழ்ச் சினிமாவில் இந்த "சீனு" மாதிரி வேறு கேரக்டர் அமைவது கடினம்!
வீடு
"மறுபடியும்", "ரெட்டைவால் குருவி" என்று சொந்தமாக உணர்ந்த சமாச்சாரத்தை அடுத்தடுத்த படத்தின் மூலம் வெளிப்படுத்தினார் பாலுமகேந்திரா.. ஆனால், ஒருவன் ஒழுக்கம் தவறினால், அவனை தூக்கி வீசலாம் என்பதையும் ஆணித்தரமாகவே சொல்லிய படம் "மறுபடியும்".. இதையடுத்து, பெரும்பாலான மக்களின் பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவதைதான் மையப்படுத்தி எடுத்தார் "வீடு" என்ற படத்தில்!
சந்தியா ராகம்
முதுமை என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கடைசி கட்டம்.. இது உலகமே எதிர்கொள்ளும் யதார்த்தம்... தவிர்க்க முடியாத, அதே சமயம் கடக்க வேண்டிய மனித நிலையின் சிக்கலான பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த படம் "சந்தியா ராகம்".. ஒரு முதியவரின் கொந்தளிப்புகளைகூட உயிரோவியமாய் செதுக்கிய படம்.. இதனிடையே, மலையாளத்தில் வெளிவந்த "ஓலங்கள்" படம் கேரள திரையுலகின் சிவப்பு கம்பளத்தை விரித்து பாலுமகேந்திராவை வரவேற்றது.
கேமிரா காட்சிகள்
ஒருவரே படைப்பாளராகவும், தொழில் நுட்ப கலைஞராகவும் இருப்பது ரொம்பவும் கஷ்டம்.. அந்த கடினத்தை எளிமையாக்கியதுடன், வெற்றியையும் பெற செய்தவர் பாலுமகேந்திராதான்.. வசனங்கள், திரைக்கதைகளுக்காகத்தான் காட்சிகள் என்ற நிலை மாறி, கேமிராவுக்காகத்தான் காட்சிகள் என்று மொத்த லாஜிக்கை புரட்டி போட்டது பாலுமகேந்திரா மட்டுமே!!
ஷோபா
"முள்ளும் மலரும்" படத்தில் இவர் கேமிராமேனாக வேலை பார்த்தபோது, ஷோபாவை பலவித ஆங்கிளில் எடுத்து தள்ளியதே அதற்கு சாட்சி.. "செந்தாழம்பூவில்" என்ற பாடலில் இவர் எடுத்த அத்தனை ஷாட்டுகளையும் வீணாக்காமல் பயன்படுத்தி இருந்தனர்.. (கிடைத்த ஒரு பாடலிலும் பாதி பாட்டுக்கு மேல் ஷோபாவையே பிரதானப்படுத்தியதற்கு சரத்பாபு வருத்தப்பட்டார் என்றுகூட அப்போது செய்திகள் வந்தன)
ஆரூடங்கள்
துளியும் கவர்ச்சி காட்டாத.. எளிமையான அழகுடன் ஷோபாவின் இயல்பு.. அவரை தன்வசப்படுத்தியது.. பாலு மகேந்திரா மீது வெறித்தனமான காதலை வைத்திருந்தார் ஷோபா... ஷோபாவுக்கு நேர்ந்த தற்கொலை மரணம் பாலு மகேந்திராவின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு கரும்புள்ளியாக இருந்தது... பலவிதமான பத்திரிக்கை ஆரூடங்களுக்கும் இந்த செய்தி அன்றைய தினம் தீனி போட்டுக் கொண்டே இருந்து, வர்த்தகத்தை முகத்தை காட்டிக் கொண்டது!
கேமிரா காதலன்
தமிழ்திரையுலகில் தரமான இயக்குனர்களில் மிகவும் தன்னடக்கமானவர்.. மலிவு விளம்பரத்தில் நாட்டம் இல்லாதவர்.. பணத்திற்காக தன்னிலை மாறாதவர்.. இவரது பார்வை விசாலமானது.. கண்ணோட்டம் ஆழமானது.. கேமிராவின் வழியாக வெளிச்சத்தை ஊருடுவி பாய்ச்சி.. அதன் மூலம் அழகியலை பார்க்க செய்த.. இந்த கேமிரா காதலன் இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்!!