ஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை: தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களான வி.ஜி.பி. மகன்கள் மூன்று பேர் மீது நில மோசடி புகாரின் பேரில் கர்நாடக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
வி.ஜி. செல்வராஜின் மகன் பரத்ராஜ் அளித்த புகாரின் பேரில் வி.ஜி.பன்னீர்தாஸ் மகன்களான ரவிதாஸ், பாபுதாஸ், ராஜாதாஸ், ஆகியோர் மீது பெங்களூரு தலஹட்டபுரா போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது.
ஒரு கூட்டு கிளியாக ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த வி.ஜி.பி.குடும்பத்திற்கு சொத்து சோதனையை கொடுத்துள்ளது.
கொரோனா டெஸ்டிங்கில் அமெரிக்காதான் முன்னணி.. இந்தியா கூட நமக்கு அடுத்துதான்.. வம்பிழுக்கும் டிரம்ப்!
சொத்துப் பங்கீடு
தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் வி.ஜி.பி. குழுமத்திற்கு கேளிக்கை பூங்காக்கள், ரியல் எஸ்டேட், கடைகள் என பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். ஆரம்பக்காலத்தில் மிகவும் கடினமாக உழைத்து உயர்வுக்கு வந்தவர்கள். இப்போது இவர்களின் வாரிசுகளுக்கு இடையே தான் சொத்து யுத்தம் நடைபெற்று வருகிறது.
வி.ஜி.செல்வராஜ் மகன்
வி.ஜி.பி. என்றழைக்கப்படும் பன்னீர்தாஸுக்கு ரவிதாஸ், பாபுதாஸ், ராஜாதாஸ் என்ற மூன்று மகன்கள் உண்டு. அவர்கள் மீது நில மோசடி புகார் கொடுத்திருப்பது வேறு யாருமல்ல, அவர்களின் சொந்த சித்தப்பா மகன்களான வினோத் ராஜூம், பரத்ராஜூம் தான். இவர்கள் வி.ஜி.செல்வராஜின் மகன்கள் ஆவர். ரவிதாஸ், பாபுதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் மீது ஏற்கனவே வினோத்ராஜ் நில மோசடி புகார் கொடுத்து அது தொடர்பான விசாரணை நடந்து வரும் சூழலில் மீண்டும் அவர்கள் மூவர் மீதும் மற்றொரு புகாரை கூறியுள்ளார் பரத்ராஜ்.
நிலம் அபகரிப்பு
பரத்ராஜ் அளித்துள்ள புகாரில், அஞ்சனபுரா பகுதியில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தனது மனைகளை ரவிதாஸ், பாபுதாஸ், ராஜாதாஸ் (அதாவது சொந்த பெரியப்பா மகன்கள்) ஆகிய மூவரும் போலி ஆவணங்கள் உருவாக்கி தங்களுக்கு உரிமையாக்கி கொண்டதோடு, அதை விற்பனையும் செய்து விட்டதாக கூறியுள்ளார். இதன்பேரில் தலஹட்டபுரா போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
முத்துக்கு முத்தாக
வி.ஜி.பன்னீர்தாஸ் கட்டிக்காத்த நற்பெயருக்கும், புகழுக்கும் அவரது மகன்கள் மூலம் களங்கம் கற்பிக்கப்படுமோ என அஞ்சுகின்றனர் வி.ஜி.பி.யின் நண்பர்கள். இதனிடையே முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என ஒரு காலத்தில் பாடித்திரிந்த குடும்பம், இப்போது அண்ணன் என்ன.. தம்பி என்ன.. என புலம்பி நிற்கிறது.