நீள்கிறது தினகரனை விட்டு செல்லும் முக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்!.. அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி
சேலம்: தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுகவிலிருந்து சற்று விலகி இருந்த புகழேந்தி தற்போது அதிமுகவில் இணைவதாக சேலத்தில் நடந்த கூட்டத்தில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் ஆர் கே நகர் தொகுதியின் எம்எல்ஏவானதன் மூலம் மக்களின் ஆழம் பார்க்கத் தொடங்கினார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த 18 பேரும் சபாநாயகரின் உத்தரவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்றார்.
திருநங்கைகளை கட்சியில் சேர்க்க விதிகளில் திருத்தம் செய்ய திமுக தீர்மானம்
கோவையில்
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் தங்கதமிழ்ச் செல்வனும் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கோவையில் ஒரு தனியார் ஹோட்டலில் தினகரன் குறித்து அவரது அதிருப்தியாளர்களிடம் புகழேந்தி கீழ்த்தரமாக பேசுவது போன்ற ஒரு வீடியோ செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வேண்டுமென்றே வெளியானது
அந்த வீடியோவில் தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான் என கூறியிருந்தார். இதனால் தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து புகழேந்தி கூறுகையில் நான் பேசியதை யாரோ வேண்டுமென்றே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
நடவடிக்கை
என்னை அமமுகவிலிருந்து யாராலும் நீக்க முடியாது. கட்சியே என்னுடையது என கூறியிருந்தார். இதற்கு தினகரன் பதிலடி கொடுத்த போது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதல்வருடன் சந்திப்பு
இந்த நிலையில் அமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்ட போது அதில் புகழேந்தியின் பெயர் விடுபட்டிருந்தது. இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிருப்தியாளர் புகழேந்தி கடந்த மாதம் 25-ஆம் தேதி சந்தித்து பேசினார். அப்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் புகழேந்தி
அதனால் அவர் அமமுகவிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் இணைகிறார் என அவராகவே சேலத்தில் நடந்த அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் அமமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களும் புகழேந்தி தலைமையில் இணைகின்றனர். இதுகுறித்து சேலத்தில் புகழேந்தி கூறுகையில் தாய் வீடான அதிமுகவில் இணைகிறேன். தினகரனை நம்பிச் சென்றவர்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அமமுக என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண் போக வேண்டாம் என தெரிவித்துள்ளார்.