வங்கி கடன் பெற லஞ்சம்- அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு ஜெயில்!
சென்னை: வங்கி கடன் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் 2014-ல் போட்டியிட்டு வென்றவர் அதிமுகவை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமது பொறியியல் கல்லூரிக்கு வங்கியில் கடன் பெற்றதில் மோசடி நடைபெற்றது என்பது சிபிஐ வழக்கு.
சென்ட்ரல் வங்கியில் ரூ20 கோடி கடன் பெற்றார் ராமச்சந்திரன். இதற்கு லஞ்சமாக வங்கி மேலாளர் தியாகராஜன், அமெரிக்கா சென்று வருவதற்காக ரூ2.69 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்தார் ராமச்சந்திரன் என சிபிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமச்சந்திரன், அவரது மகன் மற்றும் சென்ட்ரல் வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரவன், அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை கேட்டதும் வங்கி மேலாளர் தியாகராஜன், நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.