வங்கி ஊழியர்களின் பாதுகாப்பும் ரொம்ப ரொம்ப முக்கியம்!
சென்னை: ஊரடங்கு ஊரடங்கு என்று நம் வாழ்க்கை முறை மாறி போய் வீட்டுக்குள் நாமெல்லாம் முடங்கி கிடக்க எப்போதும் போல் இயங்கி கொண்டிருக்கிறது சிலரின் வாழ்க்கை மட்டும். முன்பை விட அதிகமான மணி நேர வேலையில் மூழ்கி போய் இருக்கும் மருத்துவர்களும் , செவிலியரும் , காவல்துறையினரும் படும் பாடு அலாதி. அந்த வரிசையில் இன்னொரு இனம் தான் வங்கி ஊழியர்கள்.
வங்கிகளை மூட முடியாது என்பது வாஸ்தவம் தான். பணப் புழக்கம் , பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும் இந்த நாட்களில் மக்கள் எப்படி சேமிக்க முடியும் ? குடிக்க கஞ்சிக்கு வழி இல்லாமல் ஒரு புறம் மக்கள் இருக்க யார் பாங்கில் சென்று சேமிப்பு டெபாசிட் செய்ய போகிறார்கள் ? அதனால அங்கு வரவு இல்லை.
நடுத்தர மக்கள் , மாத சம்பளம் வாங்கும் சாமானிய மக்கள் எல்லாம் இருக்கும் கை இருப்பை வைத்து காலம் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே அவர்களுக்கு பணம் தேவைபட்டால் பக்கத்தில் இருக்கும் தானியங்கி ஏ டி ம் பயன்படுத்தி எடுக்கலாமே. சாதாரண மனிதர் முதல் எல்லா தரப்பினரிடமும் இப்போது கையில் ஏ டி ம் கார்ட் இருக்குமே.
யாரும் வருவதில்லை
மக்களுக்கு அதை பயன்படுத்தியும் பழக்கம் இருக்க மக்கள் அதை எளிதாக செய்து தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இது அரசு தரும் 1000 ரூபாய் உதவி தொகைக்கும் பொருந்தும். வங்கியை மூட சொல்ல வரலை. நேரத்தை குறைக்கலாம். என்ன காரணம் என்று பார்ப்போம். இப்போது மக்கள் அதிகம் வங்கிக்கு வருவதில்லை ஊரடங்கு காரணமாக. அதனால் அலுவல் குறைவாக இருக்கிறது.
வரக் கூடாது என அறிவுறுத்தல்
மிக மிக குறைந்த அளவிலான நடமாட்டத்திற்கே மக்கள் இயங்க அரசு சொல்லி இருப்பதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அடியோடு குறைந்து போய் விட்டனர். வங்கி அலுவலர்களுக்கு அதிக பணப்புழக்கம் இல்லாததால் வேலை இல்லை. இருந்தும் பயோமெட்ரிகே என்ட்ரி என்பதால் மாலை 5 மணி வரைக்கும் சும்மாவே இருந்து கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் தான்.
அவர்களும் பாவம்தானே
பல பேர் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை, பல பேருக்கு வேலையே இல்லாத சூழ்நிலை என்று பலவாறு மக்கள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருந்தாலும் யாரும் இல்லாத கடைக்கு எதுக்கு டீ ஆத்த வேண்டும் வங்கி ஊழியர்கள் என்பது கேள்விக்குறி. அரசு போக்குவரத்து இல்லாமல் எவ்வளவு தூரம் தன் சொந்த இருசக்கர வாகனத்தில் முதுகு வலிக்க பயணித்து கொரோன தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தோடு தினம் அலுவலகம் போகும் அவர்கள் மேல் கரிசனம் வேண்டும் அரசுக்கு.
பாதுகாப்பு ரொம்ப முக்கியம்
வங்கி என்பது தவிர்க்க முடியாத ஓன்று என்பது நிதர்சனம். ஆனால் வங்கி ஊழியர்களும் மனிதர்களே. கொரோனா ஆரம்ப கட்டத்தில் வங்கிகளில் ஊழியர்கள் பிரிக்கப்பட்டு ஒரு நாள் விட்டு விட்டு மட்டுமே வரவழைக்கப்பட்டனர். இப்போதும் அரசு அதை தொடரலாம் . வேலை இல்லாமல் நேர கணக்குக்கு மட்டும் உட்கார்ந்து கொண்டு கொரோன தொற்று ஏற்படுமோ என்ற பயத்தோடு ஒவ்வொரு வாடிக்கையாளர்களை சந்திக்கும் வங்கி ஊழியர்களிடம் கனிவு காட்ட வேண்டும் அரசு.
- Inkpena