ஜெ. பிறந்த நாள் பேனர் வைக்க அனுமதி கோரி வழக்கு.. ஹைகோர்ட் தள்ளுபடி
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க ஹைகோர்ட் மறுத்துவிட்டது.
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய வழக்கை இன்று சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
வருகிற 24-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள். அதனால் அதிமுக தரப்பில் சிறப்பாக கொண்டாடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி பேனர்கள் வைக்க அனுமதியளிக்கவேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்கவும் கோரி முன்னாள் எம்பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அனுமதி மறுப்பு
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ஜெயலலிதா பேனர்கள் வைக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
தள்ளுபடி
அத்துடன், ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய பாலகங்காவின் மனுவையும் தள்ளுபடி செய்வதாக கூறினர்.
அரசின் வேலை
அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டும் அரசின் கடமை கிடையாது, சட்டவிரோத பேனர்களை வைக்காமல் தடுப்பதும் அரசின் வேலைதான் என்றனர்.
பதிலளிக்க உத்தரவு
எனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் மார்ச் 12க்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.