போக்குவரத்து விதிமீறலுக்காக வக்கீல்களை சஸ்பெண்ட் செய்யத் தேவையில்லை.. நீதிபதி பானுமதி
சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுசேரிக்கான பார் கவுன்சில் தேர்தலானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 199 பேர் போட்டியிட்டு அதில் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த மாதம் 25 உறுப்பினர்களில் தலைவர் மற்றும் துனை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதில் தலைவராக அமல்ராஜ் மற்றும் துணை தலைவராக கார்த்திக்கேயன்,இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக பிராபாகரன் வெற்றி பெற்றனர். இவர்கள் உள்ளபட 22 உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், என்.கிருபாகரன், டி.எஸ் சிவஞானம், டி ராஜா, பி.என்.பிரகாஷ், ஆர்.சுப்பிரமணியன்,
என்.ஆனந்த்வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: நிறைய வாக்குறுதிகளை கொடுத்து இந்த பதவிக்கு வந்துள்ளீர்கள். நாட்டில் உள்ள சட்டகல்லூரி எண்ணிக்கையை குறைப்பது குறித்து எண்ணி பார்க்க வேண்டும். இந்தியாவில் வழக்குகள் குறைவு. ஆனால் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பார்கவுன்சில் நடவடிக்கை நன்றாக இல்லை.
ஹெல்மேட் அணியாமல், சட்டத்தை பின்பற்றாத வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்ய வேண்டும். வழக்கறிஞர்களுக்கு வீடு வாடைக்கு கிடைப்பதில்லை. திருமணத்திற்கு பெண் கொடுப்பதில்லை. பார் கவுன்சில் கட்டிடத்தில் பார் கவுன்சிலுக்கு தேவையான வேலைகளை மட்டும் செய்யுங்கள், வேறு வேலை செய்யாதீர்கள்.
பார் கவுன்சில் தேர்தலுக்கு செய்த செலவில் ஒரு பகுதியை இளம் வழக்கறிஞர்கள் மற்றும் நலிவடைந்த வழக்கறிஞர்களுக்காக செலவிடுங்கள். மதுரை வழக்கறிஞர்கள் போன்று சென்னை வழக்கறிஞர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து இளம் வழக்கறிஞர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என்றார்.
இறுதியாக பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி, போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் உடன்பாடு இல்லை. வழக்கறிஞர்கள் சட்டப்படி, தவறான நடத்தை தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் சாதாரண புகார்களில் சிக்கும் வழக்கறிஞர்களை எச்சரித்து, கண்டித்து கொள்ளலாம் என ஆலோசனை தெரிவித்தார்.