தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ்
சென்னை: வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பார் கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் இந்திய பார்கவுன்சில் அறிவித்திருந்தது.
கடந்த 2010 ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது. சட்டப்படிப்பை முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் குறித்த கால அவகாசத்திற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இந்த நோட்டீசில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தவிர்க்க தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை பார்கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது