குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. தீபாவளிக்கு முன் நடக்க போகும் முக்கிய மாற்றம்
சென்னை: மது அருந்துபவர்கள் இனி பாரிலேயே உட்கார்ந்து சரக்கு அடிக்கலாம், ஏனெனில் பார்கள் அனைத்தும் தீபாவளிக்கு முன்பே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 50 நாட்களுக்கு பிறகு மே மாதத்தில் திறக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் மூடப்பட்ட கடைகள் அடுத்த ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் திறக்கப்பட்டன.
படிப்படியாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் பின்னாளில் அனைத்து பகுதியிலும் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
டோக்கன் சிஸ்டம்
மதுக்கடைக்கு வருவோர் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ஆரம்பத்தில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. மதுக்கடைகளுக்கு வருவோரில் ஒரு சிலரே முககவசம் அணிந்து வருகிறார்கள். டோக்கன் சிஸ்டமும் இல்லை.
இரவு 8 மணி வரை
போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட மதுக்கடைகள் பின்னாளில் போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டு, தற்போது வழக்கம் போல் இயங்கி வருகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையில் இயங்க மதுக்கடைகள், அதன்பிறகு இரவு 8 மணி வரை செயல்படும் என்று நீட்டிக்கப்பட்டது. தற்போது வரையிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் இயங்குகின்றன.
எப்போது திறக்கப்படும்
தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள, பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதிகாரி தகவல்
ஆகஸ்ட் மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை. இந்தநிலையில், தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு தயாராகி வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதுகுறித்து அவர் கூறும் போது. தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சமூக இடைவெளி, குறைந்த நபர்களை அனுமதிப்பது, இறைச்சி உணவுகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பார்களை திறப்பது, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்றார்.