நிலவில் நிலம் தருவேன்னு சொன்னாரா ராகுல் காந்தி.. உண்மையைச் சொன்ன பிபிசி
சென்னை: விவசாயிகளுக்கு நிலாவில் நிலம் தருவேன் நீங்கள் அனைவரும் அங்கு சென்று விவசாயம் செய்யலாம் என்று ராகுல் காந்தி கூறியதாக வலம்வரும் வீடியோ உண்மையானதா என்பது குறித்து பிபிசி யின் உண்மை கண்டறியும் குழு அம்பலப் படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராகுல்காந்தி விவசாயிகளிடம் “நீங்கள் இங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்து சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், அங்கு நீங்கள் விவசாயம் செய்வதற்கான நிலத்தை அளிக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிரிடுவீர்கள். நான் அங்கு இயந்திரம் ஒன்றை வைத்து, அதன் மூலம் உருளை கிழங்கை குஜராத்திற்கு கொண்டு வருவேன்" என்று பேசுவது போன்றுள்ளது.
இந்த வீடியோவுக்கு கீழே "தயவுசெய்து யாராவது இவரை நிறுத்துங்கள். விவசாய நிலத்தை நிலவில் ஏற்படுத்தி தருவேனென்று அவர் கூறுகிறார்" என்ற விளக்கம் கொடுக்கப்பட்டு, 'டீம் மோதி 2019" மற்றும் "நமோ அகைன்" உட்பட பல்வேறு பாஜக ஆதரவு வலதுசாரி ஃபேஸ்புக் குழுக்களிலும், ட்விட்டரிலும் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 24 வினாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது. இந்த வீடியோ குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பிபிசியின் உண்மை கண்டறியும் குழு செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள அந்த செய்தியில் ராகுல் காந்தி பேசுவது திரிக்கப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது. அதாவது அந்த வீடியோவில் பேசியிருப்பது ராகுல்காந்திதான். ஆனால் அவர் பேசும் முழுப் பகுதியையும் ஒளிபரப்பாமல் சில பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி ஒளிபரப்பியுள்ளனர். இது குறித்து மேலும் கூறும் பிபிசி 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக குஜராத்திலுள்ள பட்டான் என்னுமிடத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து இந்த குறிப்பிட்ட 24 நொடிகள் மட்டும் வெட்டப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் உண்மையான கூற்றை தெரிந்துகொள்வதற்காக அந்த பரப்புரையின் முழு காணொளியை பார்த்தபோது, "நான் போலியான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். "உங்களால் இங்கு விவசாயம் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், நான் அங்கு உங்களுக்கு விவசாய நிலம் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை விளைவிக்கலாம். நிலவில் ஒரு இயந்திரத்தை வைத்து அங்கு விளையும் உருளை கிழங்குகளை குஜராத்தில் இறக்குமதி செய்வேன்' என்று மோதி கூறுவதை போன்று என்னால் வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. நான் உண்மையை மட்டுமே கூறுவேன்" என்று பிரதமர் நரேந்திர மோதியை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
2017ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பதிவேற்றிய இந்த முழு காணொளி ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. இதே கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் மற்றொரு பகுதியும் சில ஆண்டுகளுக்கு முன்பு திரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. நரேந்திர மோதியின் வாக்குறுதியை நம்ப கூடாது என்பதை வலியுறுத்தி பேசிய ராகுல் காந்தியின் உரையை மையமாக கொண்டு அவரை கேலி செய்து சமூக ஊடகங்களில் மீம்கள் போடப்பட்டன. குஜராத்தின் பட்டான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் மொத்தமுள்ள 17 நிமிடங்கள் 50 நொடிகள் கொண்ட காணொளியிலிருந்து இந்த பகுதியும் எடுக்கப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது.
570 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்.. இவர்களில் எத்தனை பேர் எம்பியாகப் போறாங்களோ!
"இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் உருளை கிழங்கை போட்டால், அதன் மற்றொரு பக்கத்திலிருந்து தங்கமாக வெளிவரும் என்று அவர் கூறுகிறார். நீங்கள் நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அதை வைத்து என்ன செய்வதென்று உங்களுக்கு தெரியாது. இதெல்லாம் என்னுடைய வார்த்தைகளல்ல; பிரதமர் நரேந்திர மோதி கூறியது" என்ற பேசும் ராகுல் காந்தியின் உரை, திரிக்கப்பட்டு வைரலாக்கப்பட்டது. இப்படியாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியோடு பிபிசி மற்றொரு செய்தியையும் சேர்த்தே கூறுகிறது அதாவது மோடி கூறியதாக ராகுல் காந்தி குறிப்பிடும் செய்திகளை கண்டறிய இயலவில்லை என்றும் கூறுகிறது.