பீலாவை மாத்தியாச்சு.. விஜயபாஸ்கரும் மாற்றப்படுவாரா.. அவருக்கும் பங்குஇருக்கே.. கொங்கு ஈஸ்வரன் கேள்வி
பீலா ராஜேஷ் டிரான்ஸ்பர் குறித்து கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "அரசின் தோல்வி தான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது... அவரும் மாற்றப்படுவாரா? அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை" என கொங்கு ஈஸ்வரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்... வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை வருவாய் ஆணையர் பதவியை அவர் கூடுதலாகக் கவனிப்பார்" என்று கூறப்பட்டிருந்தது.
மிகப்பெரிய திருப்பத்தையும், சலசலப்பையும் இந்த அறிவிப்பு இன்று ஏற்படுத்தியது.. இந்நிலையில் இது தொடர்பாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சில சந்தேகங்களையும் எழுப்பி, ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
"தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. நோய் தடுப்பு திட்டமிடலில் தமிழக அரசின் செயல்பாடுகள் போதாது என்று பலமுறை எல்லா தரப்பினரும் எச்சரித்தனர். ஆனால் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பேசியும், சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் இரவு பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்லியும் தட்டிக்கழித்தனர்.
உலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா ?. தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என்ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள்.
அந்த ஒரு பேட்டி.. எழுந்த பெரும் சர்ச்சை.. பீலா ராஜேஷ் அதிரடி பணியிடமாற்றத்தின் பரபர பின்னணி
இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர் தான் சுகாதாரத்துறை செயலாளர். அரசின் தோல்வி தான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா ?
அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தமிழக மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இப்போதாவது ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு திட்டமிடலோடு செயல்படுங்கள். தவறவிட்டால் நோய் தொற்றினால் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.