பாஜகவைத் தேடி வந்த பிச்சைக்காரர்கள்.. டெல்லியில் வெடித்த குண்டு.. செம டென்ஷனில் அமித் ஷா!
சென்னை: பாஜகவின் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டத்திற்கு பிச்சைக்காரர்கள் வரவழைக்கப்பட்ட விவகாரம் டெல்லியில் பெரிதாக வெடித்துள்ளதாக சொல்கிறார்கள்.
இந்தியாவில் பி.ஜே.பி.யின் ஆதிக்கம் எந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறது? என்பதை விளக்க வார்த்தைகளே இல்லை. இப்போது அதையும் தாண்டி, 'பாகிஸ்தான், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர பகுதிகளையும் மீட்டெடுப்போம்' என்று நாடாளுமன்றத்தில் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும்.
இப்படி பி.ஜே.பி. சர்வதேச அளவில் ஆக்ஷன் நாயகனாக அவதாரம் எடுத்திருக்க மிக முழுமையாக கைகொடுத்திருப்பது அதன் தேர்தல் வெற்றிதான். முதல் தேர்தலில் வெல்வது பெரிதல்ல, ஆனால் தொடர்ந்து இரண்டாவது தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைப்பது என்பது மிக மிகப்பெரிய சாதனைதான். அதை பி.ஜே.பி. செய்துள்ளது.
கண்ணில் விழுந்த மண்
ஆனால் அக்கட்சிக்கு கண்ணில் விழுந்த மண்ணாக இருப்பது தமிழகம் உள்ளிட்ட வெகு சில மாநிலங்கள்தான். தமிழகத்தில் தலைகீழே நின்று பார்த்தும் வெற்றி என்பது வெறும் காத்தாகத்தான் இருக்கிறது. எப்படியாவது அடுத்து வரும் தேர்தல்களுக்குள் பி.ஜே.பி.யை தமிழகத்தில் வளர்த்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறது பி.ஜே.பி. உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாவும் தொடர்ந்து தமிழக நிலவரங்களை கவனித்து, கட்சியை உசுப்பிவிட்டு, வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்.
பிச்சைக்காரர்கள்
இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தமிழக பி.ஜே.பி. தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை நடத்தியிருக்கிறது. அதில் வந்து கலந்து கொண்ட மாநில தலைவர் தமிழிசைக்கு அந்த கூட்டத்தைப் பார்த்து பேரதிர்ச்சி. காரணம், கணிசமான பிச்சைக்காரர்களும் அந்த கூட்டத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்ததுதான். உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் இல்லை என்று சொல்லி இப்படி பிச்சைக்காரர்களையும் கொண்டு வந்து உட்கார வைத்திருந்தனராம். தாறுமாறாக டென்ஷனான தமிழிசை, சில நிமிடங்களில் அங்கிருந்து போய் விட்டாராம்.
என்னங்க நடக்குது
தேசத்தை ஆளும் பி.ஜே.பி.யில் உறுப்பினராக தமிழகத்தில் ஆளே கிடைக்காத கொடுமை மாநிலத்தின் பிற மாவட்ட பி.ஜே.பி.யினருக்கும் பரவியது. அதில் சில தலைவர்கள் இந்த விஷயத்தை அப்படியே டெல்லிக்கு அனுப்பி, அமித்ஷாவின் கவனம் வரை கொண்டு சென்றுவிட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு கன்னாபின்னாவென அப்செட்டும், ஆத்திரமும் அடைந்த அமித், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசையிடம் தன் உதவியாளர்கள் மூலம் விளக்கம் கேட்க, அவரும் ‘நான் போனப்ப அப்படித்தான் பிச்சைக்காரர்களும் அங்கே உட்கார்ந்திருந்தாங்க.' என்று ஒப்புக் கொண்டுவிட்டார். உடனே அதே உதவியாளர்கள் வழியே தமிழிசைக்கு கடுமையான அதிருப்தியையும், கட்சி நிர்வாகிகளுக்கு கண்டங்கள் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார் அமித். இதில் தலையே சுற்றிவிட்டது தமிழிசைக்கு.
ஆனால் எச். ராஜா சமாளிச்சார் பாருங்க!
எதிர்கட்சியினர் மத்தியில் டாப்கியரில் டேக் ஆப் ஆகிவரும் இந்த பிச்சைக்காரர்கள் விஷயத்தை பற்றிப் பேசும் பி.ஜே.பி.யின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா "ஸ்டாலின் குடும்பத்தையும், மாறன் குடும்பத்தையும்தான் சேர்த்துக் கொள்வோம் என்று எங்கள் கட்சிக்கு கொள்கை கிடையாது. ஏழை எளியவர்களையும் அரவணைக்கிறோம். கூட்டம் இல்லை என்று பிச்சைக்காரர்களை அழைத்து வந்து உட்கார வைத்ததாக சொல்வது முழு பொய். அவர்களாக தேடி வந்து கூட்டத்தில் அமரும்போது எங்கள் நிர்வாகிகள் எப்படி தடுக்க முடியும்?" என்றிருக்கிறார்.
அவ்வ்வ்....எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது!
- ஜி.தாமிரா