பத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்
பத்ரகாளி அவதார தினம். இன்று வீட்டில் தேவி பாகவதம் படிக்க நன்மைகள் நடக்கும். தொழில் செய்யும் இடங்களில் சண்டி ஹோமம் செய்யலாம். எதிரிகள் தொல்லை ஒழியும்.
சென்னை: வீட்டில் கோபத்தோடு பேசும் பெண்களைப் பார்த்து ஏன் காளி மாதிரி இருக்கிறாய் என்று கேட்பார்கள். காளி என்றாலே கோபக்கார கடவுள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். பத்ரகாளி அவதார தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. துர்காஷ்டமி தினமான இன்று மகாகாளியைப் பற்றி அறிந்து கொள்வோம்.
காளி என்றாலே அவளின் உக்கிரமான உருவமும், பயமும் தான் நம் மனதில் தோன்றும். தீய சக்திகளை அழிக்க அம்பிகை எடுத்த அவதாரம் தான் காளி. காளியைப் பார்த்து அஞ்சத்தேவையில்லை. காளியை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். காளியை மனதார நினைத்து ஸ்லோகத்தை உச்சரித்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பத்ரகாளி அவதார தினமான இன்றைய தினம் அம்மனை வணங்கி தேவி பாகவதம்
படிக்கலாம்.
சிவபெருமானை விட தானே உயர்ந்தவர் என்ற மமதை தட்சனிடம் ஏற்பட்டது. சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார் தட்சன். இதை அறிந்ததும் அம்பிகை ஆவேசம் அடைந்தாள். மற்றவரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடத்தப்படும் யாகத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் அன்னை. எனவே அவள் சக தேவதைகளுடன் இந்த உலகில் மிகவும் உக்கிரமாக அவதரித்தாள். அன்னை பத்ரகாளி அவதாரம் எடுத்த தினம் துர்க்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
காளியின் கண்களில் கோபம் தெறிக்க ஆக்ரோஷமாக கைகளில் சூலத்தை ஆவேசமாகப் பிடித்திருப்பாள். காலின் கீழே ஒரு அசுரன் மிதித்து வதம் செய்த அன்னையின் கழுத்தில் மண்டை ஓடு மாலை தொங்கும். பத்துக்கரங்களிலும் வரிசையாக ஆயுதங்களை ஏந்தி அனைவரையும் அச்சப்பட வைப்பாள் காளிதேவி.
காளி பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் பக்தர்களுக்கு சாந்த சொரூபி. வரங்களை கொடுப்பவள். துஷ்டர்களை அழிக்கத்தான் ஆயுதம் ஏந்தியிருக்கிறாள் காளி அம்மன்.
இன்று துர்க்காஷ்டமி தினமாகும். இன்றைய தினம் ஸ்ரீதுர்கா தேவியை பூஜை செய்யவும் துர்கா ஸ்தோத்ரம் சொல்லவும், சண்டீஹோமம் முதலான ஹோமங்கள் செய்யவும் மிகச்சிறந்த நாள்.
அம்மனை ஆராத்திக்கும் ஸ்ரீவித்யா மார்கத்தில் முக்கியமாக பத்து விதமான அம்மனின் வடிவங்கள் உபாசிக்க சிறந்தவை. தமா மகாவித்யைகளில் முதலாவதாக காளி என்னும் ஸ்வரூபம் கூறப்பட்டுள்ளது. பத்து விதமான அம்மனுக்கும் காளிதான் தலைவி.
துர்க்காஷ்டமி, பத்ரகாளி அவதார தினமான இன்றைய தினம் காளியை பூஜிப்பவர்கள் உபாசிப்பவர்கள் தசா மகாவித்யா என்னும் பத்து வித அம்மனின் வடிவங்களையும் பூஜித்த பலனைப் பெறுவார்கள்.
காளிதாஸர், கவிச் சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், வீர சிவாஜி, தெனாலிராமன் போன்ற பலரும் காளியின் அருள்பெற்றவர்களே. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காளி தேவி காட்சி அளித்திருக்கிறார்.
உக்கிர தெய்வமாக காளியம்மன் இருப்பதால் இல்லறத்தில் இருப்பவர்கள் தேவியின் உக்கிரமான தோற்றம் கொண்ட படத்தையோ அல்லது சிலையை வைத்து வழிபடுவது சில சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். ஆயினும் காளிதேவியை மனதிற்குள்ளாக வைத்து வழிபடுவதால் எந்த ஒரு பாதகமும் இல்லை.
"ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா"என்ற இந்த மந்திரத்தை முறையான குருவிடம் பயின்று, சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ அவருக்கு எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் திறன் அதிகரிக்கும்.
இந்த மந்திர சக்தியின் பலத்தால் வீட்டில் எந்த வித தீய சக்திகளும் ஆண்ட முடியாது. இதை உச்சரிப்பவருக்கு ஞானம் பெருகும், செல்வ நிலை உயரும், எதிரிகளை எதிர்க்கும் தைரியமும் மனதில் ஒரு தெளிவும் பிறக்கும்.
செவ்வாய்க்கிழமை காளிதேவியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அன்றைய தினத்தில் ராகு கால நேரத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் பிரச்சினைகள் தீரும் கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் மறையும்.