'பாரத் பந்த்'- தமிழகத்திலும் வெடித்தது போராட்டம்- விவசாய சட்ட நகல்கள் எரிப்பு- மண்டை ஓடு போராட்டம்
சென்னை: மத்திய அரசின் புதிய விவசாய (வேளாண்) சட்டங்களுக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது. தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி ஆயிரக்கணக்கில் கைதாகி உள்ளனர். திருத்துறைப்பூண்டியில் வேளாண் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் இன்று நடத்தப்பட்டது, வட இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள் தீவிரப் போராட்டம் நடத்தினர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்!
திருச்சியில் மறியல்
கர்நாடகாவிலும் இந்த போராட்டம் உக்கிரமடைந்தது. தமிழகத்தில் இன்று காலை முதல் பல இடங்களில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மண்டை ஓடுகளுடன் போராட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் முற்றுகையிட்டனர். கையில் மண்டை ஓடுகள், தூக்கு கயிறு ஆகியவற்றுடன் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சட்ட நகல்களை எரித்த விவசாயிகள்
தஞ்சாவூர்- திருச்சி சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டியில் வேளாண் சட்ட நகல்களை விவசாய சங்கத்தினர் எரித்தனர். இதனையடுத்து சட்ட நகலை எரித்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை நெல்லையில் போராட்டம்
திருச்செங்கோட்டில் அண்ணாசாலை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கங்கள் முற்றுகையிட்டன. நெல்லை வண்ணாரப்பேட்டையிலும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
ஏர் கலப்பையை தூக்கிலிடும் விவசாயி
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் வைகை அணை சாலையில் இருந்து பேரணி நடத்தினர். ஏர் உழும் கலப்பையை விவசாயி தூக்கிலிடுவது போன்று சித்தரித்து ஊர்வலமாக வந்து பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சேலத்தில் போராட்டம்
சேலம் அருகே கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்தனர். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் வாழப்பாடி ஓமலூர் உள்ளிட்ட 7 இடங்களில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உருண்டு மறியல்
சென்னை தண்டையார்பேட்டையில் விவசாய மசோதாவை கண்டித்து விவசாயிகள் சாலையில் படுத்து உருண்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரம் பேருந்துநிலையம் அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சுங்க சாவடி முற்றுகை முயற்சி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக சென்று அங்குள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் விவசாய சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் தூக்கு மாட்டும் போராட்டம்
தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில், மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும். வாழைக்கன்று, கரும்பு ஆகியவற்றுடன் வந்து மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த அதிமுக அரசை கண்டித்தும், முழக்கங்களை எழுப்பினர்.