பத்தாண்டுகால வனவாசம்..பாத யாத்திரை.. காங்கிரஸ் குழுவில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
சென்னை: பாரத் ஜோடோ யாத்ரா ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டமிடல் குழுவில் சசிதரூர், ஜோதிமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உள்ளனர். ராகுல்காந்தியின் பாதையாத்திரை பயணத்திட்டத்தில் இடம்பெற வேண்டியவைகளை இந்த குழுவினர் முடிவு செய்வார்கள்.
2014 நடைபெற்ற லோக்சபா தேர்தல் தொடங்கி சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் வரை காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ராகுல்காந்தியின் தலைமையை ஏற்க மூத்த தலைவர்கள் தயாராக இல்லை என்பதால் தற்காலிக தலைவராகவே சோனியாகாந்தி நீடித்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ளது. பாஜக இல்லாத, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க சில மாநில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியை கட்டமைத்து தங்களின் தலைமையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் சோனியாகாந்தி.
அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட சுமார் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். கட்சியை பலப்படுத்துவது, தேர்தல் வியூகங்கள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மக்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சி மிக நீண்ட தொலைவு தள்ளி சென்று விட்டதாக கருத்து நிலவுகிறது. எனவே மக்களை கவரும் வகையில் நாடு முழுவதும் அடித்தட்டு மக்களை சந்திக்க தயாராகி வருகிறார் ராகுல்காந்தி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை செல்லப்போகிறார். அந்த யாத்திரை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பு குழுவை இன்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்ரா ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டமிடல் குழுவில் திக்விஜய சிங், சச்சின் பைலட், ஷஷி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, கே.ஜே. ஜார்ஜ், ஜோதி மணி, பிரத்யுத் போர்டோலோய், ஜிது பட்வாரி மற்றும் சலீம் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பணிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும், காங்கிரஸின் அனைத்து முன்னணி அமைப்புகளின் தலைவர்களும் மத்திய குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. அடுத்தடுத்து நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தலிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் கரைந்து காணாமல் போய் கொண்டுள்ளது. கட்சியைப் காப்பாற்ற பாதையாத்திரை என்ற வியூகத்தத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இது திமுகவின் நமக்கு நாமே பயணம் போல மக்களை சந்திக்கும் பயணம்தான். மக்களின் மனம் கவர்வாரா ராகுல்காந்தி பார்க்கலாம்.