பழையன கழிதலும்… புதியன புகுதலும்.. போகிப் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
போகிப் பண்டிகை என்பது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப் படுகிறது. பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை போக்கி எனப்பட்டது.
பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம். போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.
அந்தச் சொல் பிற்காலத்தில் மருவி போகி என்றாகிவிட்டது. அந்த வகையில் அதிகாலையில் மக்கள் பழைய பொருட்களை வீடுகளின் முன்பு போட்டு தீவைத்துக் கொளுத்தி போகிப்பண்டிகையை கொண்டாடினர். மேலும் மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி தீயில் எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பதே போகிப்பண்டிகையின் சாராம்சம்.
போகிப் பண்டிகை கொண்டாட்டம்
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துத மிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
எங்கும் புகை மண்டலம்
அதனையடுத்து, பழைய பொருட்களை கொண்டு வீட்டின் முன்பு கொட்டி, கொளுத்தி அனைவரும் போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தொடங்கியுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகாலையில் மக்கள் வீடுகளில் உள்ள பயனற்ற பொருட்களை தீயிட்டு எரித்தனர். அதன் காரணமாக, பல பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தன. சென்னையில் பனி மூட்டத்துடன் போகி புகைமூட்டமும் சேர்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். விமான சேவை பாதிக்கப்பட்டதோடு, பல ஊர்களுக்கு கிளம்ப வேண்டிய விமானங்கள் தாமதமாகின.
பறை இசைத்து உற்சாகம்
பயனற்ற பொருட்களை எரித்த போது, மேளங்களை அடித்தும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலித்தனர். சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலமிட்டு மகிழ்ந்தனர்.
கடவுளுக்கு வழிபாடு
போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைத்தனர்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் அதே வேளையில் பல்வேறு பொருட்கள் எரிக்கப்படுவது வழக்கம். மாசுபாட்டை கருதியும், உடல் நலத்தை கருத்தில் கொண்டும், பிளாஸ்டிக், டயர், டியூப் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
தற்போது நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை பிளாஸ்டிக், ரப்பர் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டவையாக இருக்கின்றன. இந்த சூழலில் போகிப் பண்டிகையை ஒட்டி பயனற்ற பொருட்களை எரிப்பதால் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை வெளியாகின்றன.
மாசில்லா போகி
அவை சுற்றுச்சுழலுக்கும், உடல் நலத்துக்கும் பெரிதும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதனை எரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகையற்ற, மாசற்ற போகிப் பண்டிகையை கொண்டாடி பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.