இது வேறலெவல் பிசினஸ்... பிக்பாஸ் ரேட்டிங்குக்காக களமிறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்!
Recommended Video
சென்னை: உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இன்றைய உயிர் மூச்சு. அந்த அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்சனை உணர்வுப்பூர்வமானது; இந்த பிரச்சனை தமிழகத்தில் பற்றி எரியும் பெருநெருப்பாக இருந்து வருகிறது.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது ஈழத் தமிழர் பிரச்சனை. ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் சொல்லி மாளாதவை.
புதிய இயக்கங்கள்
ஆனாலும் தமிழகம் ஈழத் தமிழர் ஆதரவை ஒருநாளும் விட்டுவிடவில்லை. 2009- இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முடிவுக்கு வந்த போது இளைய தலைமுறை பிள்ளைகளில் பெரும்கோபத்தை விதைத்தது. அதனால் நாம் தமிழர் கட்சி. மே 17 இயக்கம் என புதிய அமைப்புகள் உதயமாகின.
ஈழத் தமிழர்களும் அரசியலும்
இருப்பினும் தேர்தல் அரசியல் களத்தில் ஒருகாலத்திலும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை இருந்தது இல்லை. அதேநேரத்தில் தமிழ் சினிமா உலகின் தலை எழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
சினிமா துறை பேரவலம்
தமிழகத்தில் தியேட்டர்கள் கண்காட்சிப் பொருளாக மாறிவிட்டன.. தியேட்டர்களுக்கு போகும் ரசிகர்கள் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. ஒரு தமிழ் சினிமா 2 அல்லது 3 நாட்கள் வெற்றிகரமாக ஓடிவிட்டால் அந்த வாரத்தின் கடைசியிலேயே வெற்றிவிழா கொண்டாடிகிற பேரவலம்தான் இருக்கிறது.
உயிர்ப்பு தரும் ஈழத் தமிழர்கள்
இப்படியான சூழலிலும் தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருக்கிறது எனில் வெளிநாடுகளில் அள்ளித் தரும் வசூல்தான். குறிப்பாக ஈழத் தமிழர்களால்தான் இன்றைய தமிழ் சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களை ஒரு படம் ரீச் ஆகிவிட்டாலே போதும்.. நிம்மதி என்கிற நிலைதான்.
டல்லடித்த பிக்பாஸ்
இதே பார்முலாவைத்தான் இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸுக்கும் பொருத்தி இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 1-ல் இருந்த விறுவிறுப்பு எதிர்பார்ப்புகள் சீசன் 2-ல் இல்லை என்பது பொதுவான கருத்து. அதனால் சீசன் 3-ஐ மொக்கையாக நடத்திவிடக் கூடாது என பக்காவாக ரூம் போட்டு யோசித்து யோசித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.
துயரமும் வலியுமாக...
இயக்குநர் சேரன், செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு என பிரபலங்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணியும் இதுதான். அதேநேரத்தில் வெளிநாடுகளிலும் பிக்பாஸ் ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக 2 ஈழத் தமிழர்களை களமிறக்கி உள்ளனர். அவர்கள் தங்களைப் பற்றிய முன்னுரையிலேயே போரின் வலிகளை துயரத்துடனும் கண்ணீருடனும் பகிர்ந்து கொண்டனர்.
பக்கா பிசினஸ்
இது வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி நிச்சயம் ரேட்டிங்கை அதிகரிக்கவே செய்யும். அதாவது ஈழத் தமிழர்களின் துயரத்தையும் கண்ணீரையும் காசாக்கிப் பார்க்கும் அப்பட்டமான பிசினஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் ஈழத் தமிழர் ஒருவரே வெற்றியாளர் என பிக்பாஸ் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.