ஒருத்தரை விட கூடாது! 8588 பேருக்கும் போன் போடுங்க.. ஸ்டாலின் மெகா பிளான்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி
சென்னை: இந்தியாவில் இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் பிறப்பிக்கப்படாத மிக முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டதே அதற்குத்தான். அதன்பின் பஸ்பாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இடைநிற்றலை தவிர்க்கவே.
முக்கியமாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டமும் மாணவியர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவேத்தான்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்! தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
ஆண்கள்
ஆனால் இப்படி பல திட்டங்கள் இருந்தும் மாணவ, மாணவியர் பலர் பள்ளி கல்வி முடித்து கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே முடங்குகிறார்கள். வறுமை, குடும்ப சூழ்நிலை, ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவியர் பலர் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி சதவிகிதம் 52 ஆக உள்ளது. இதுதான் தேசிய அளவில் அதிகம்.
முன்னேறிய நாடுகள்
பல முன்னேறிய நாடுகளை விட நாம் உயர் கல்வியில் டாப்பில் இருக்கிறோம். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் மேலும் உயர் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி முடித்து கல்லூரி செல்லாமல் இருக்கும் மாணவர்களை கண்டறியும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு போதுமான உதவிகளை வழங்கி, அவர்களை கல்லூரி பக்கம் கொண்டு செல்லும் திட்டம் செயலுக்கு வந்துள்ளது. இதற்காக இந்தியாவில் இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் பிறப்பிக்கப்படாத மிக முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று பிறப்பித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தெடர்ந்துள்ளனாரா என்பதனை அறிந்திட இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதனை களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள் வழங்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
உயர்கல்வி
இக்கூட்டத்தின் போது பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகு மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 26.08.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற உள்ளோம்.
கல்வி
எனவே, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பெறப்பட்டு அதை உடனடியாக அரசுக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அந்த மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களுக்கு முறையான மேல்படிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.