பிக் பாஸ் 3: சாக்ஷியால் சிறைக்குப் போகும் சேரன்.. கவினுக்காக அழுத லாஸ்லியா.. மாட்டிக் கொண்ட வனிதா!
பிக் பாஸ் வீட்டில் 18ம் நாளில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
சென்னை: ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் ஐந்து கொலைகளைச் செய்து முடித்த வனிதா, தன் வேடத்தை கலைத்து விட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஏற்கனவே நான்கு பேர் கொல்லப்பட்டு விட்டனர். இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல் பாடலுடன் பொழுது எட்டு மணிக்கு விடிந்தது. பேட்ட பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடினர்.
தொடர்ந்து கொலைகளாக நடைபெற்று வந்ததால், யார் கொலையாளி என்பது தெரியாமல் போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனாலும் டாஸ்க் ஆரம்பிக்காததால், கவினும், சாண்டியும் சேர்ந்து தங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே எபிசோட்களில் நாம் பார்த்த, கேட்ட பாடல்கள் தான் என்றாலும், அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். கவின் லாஸ்லியா பாடலைப் பாடும் போது, சாக்ஷியின் முகம் பொறாமையில் சிவந்து கொண்டிருந்தது. எப்படியும் அவர் தனது கோபத்தை வேறு வழியில் கவின் மற்றும் லாஸ்லியா மீது வெளிப்படுத்துவார் என்பது அப்போதே நமக்கு புரிந்து விட்டது.
பிறகு மீண்டும் டாஸ்க் ஆரம்பமானது. பேய்கள் கல்லறைப் பகுதிக்கு சென்று விட, கவின், சாண்டி மற்றும் மீராவை அழைத்தார் பிக் பாஸ். கன்பெக்சன் ரூமில் வைத்து, கவினுக்கும், மீராவுக்கும் போலீஸ் பணியும், சாண்டிக்கு பேய்களுடன் பேசும் மந்திரவாதி பணியும் அளிக்கப்பட்டது. போலீஸ் ஒருபுறம் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களிடம் விசாரணை நடத்த, சாண்டி மறுபுறம் பேய்களிடம் கொலையாளி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
பேய்களாகட்டும், சக போட்டியாளர்களாகட்டும் அனைவரது கணிப்புமே மதுவும், லாஸ்லியாவும் தான் கொலையாளிகள் என்பதாகவே இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்கள் இருவருமே போலீசிடம் முன்னுக்குப் பின்னாக பதிலளித்து சந்தேகத்தை அதிகப்படுத்தினர். கவின் இது தான் சாக்கென, லாஸ்லியாவிடம் ஒஸ்தி சிம்பு ரேஞ்சுக்கு விசாரணை நடத்தினார்.
போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் பிக் பாஸ் டென்சன் ஆகிவிட்டார் போல, 'கூப்புடுறா வனிதாவை, தூக்குடா அந்தக் கவினை’ என நாட்டாமை உத்தரவிட்டு விட்டார். கவினின் துப்பாக்கியைத் திருடி விட்டால், அது அவரைக் கொலை செய்ததற்குச் சமம் என அறிவிக்கப்பட்டது. வழக்கம் போலவே, வனிதாவும், முகெனும் சேர்ந்து சாமர்த்தியமாக அந்தக் கொலையை செய்து முடித்தனர். ஆனால் துப்பாக்கி காணாமல் போனது கூட தெரியாமல் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார் டுபாக்கூர் போலீசான கவின்.
இடையில் சாக்ஷி வெயிலில் கஷ்டப்படுவதால், சற்று காண்டாகி விட்டார். அதனால் கவின் கத்த, அவரைத் தொடர்ந்து சேரன் கத்த என வீட்டில் சத்தம் அதிகமானது. ஒரு கட்டத்தில் சேரன் கேமரா முன் நின்று, 'இது என்ன விளையாட்டுனே புரியல. ஒண்ணு புரிய வைங்க. இல்ல நான் டாஸ்க்கில் இருந்து விலகிக்கறேன்’ என அதிரடியாக மிரட்டினார்.
போட்டியாளர்கள் பொங்கியெழ ஆரம்பித்து விட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிக் பாஸ் கொலைகாரன் டாஸ்க்கை முடித்து வைக்க முடிவு செய்தார். கவினை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, மீராவிற்கு இன்ஸ்பெக்டர் புரொமோசன் கொடுத்தார். பின் மாலையில் அனைவரையும் அழைத்து வீடியோ போட்டுக் காட்டி, வனிதாவையும், முகெனையும் காட்டிக் கொடுத்தார். வனிதா கையில் செல்போன் இருந்ததைக் கண்டு சகபோட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த டாஸ்க்கில் சிறப்பாகச் செயல்பட்ட இரண்டு பேரின் பேர்களைக் கூற வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். சொல்லப் போனால் வனிதாவும், முகெனும் தான் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், கவின் சாக்ஷி பெயரை முன்மொழிய, கேப்டன் அபிராமியும் வேகமாக பிக் பாஸிடம் அதனை வழிமொழிந்தார். இதனால் முகென் முகம் வாடிப் போனார். ஆவேசமான மோகன் முனகத் தொடங்க, சாக்ஷி பேரை அழித்து விட்டு, மோகன் பேரைச் சேர்த்தார்கள். பின் போனால் போகட்டும் என பிக் பாஸ் சாக்ஷிக்கும் ஒரு வாய்ப்பு அளிக்க, வனிதா, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்மூலம் பிக் பாஸ் மறைமுகமாகச் சொல்லும் சேதி, இந்த வாரம் வனிதாவும் சரி மோகனும் சரி எவிக்சன் ஆகப் போவதில்லை என்பது தான். பின் சரியாக விளையாடாத போட்டியாளர்களாக சேரனும், சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் கோபமானார் சரவணன். உடனே இம்முறை அவரது பெயரை அழித்து விட்டு, அங்கு கவின் பேரைச் சேர்த்தார்கள். இது ஒருபுறம் இருக்க, சம்பந்தமே இல்லாமல் லாஸ்லியா நான் தான் சிறைக்குப் போவேன் என ஒத்தக்காலில் நின்று அடம் பிடித்தார்.
பின் பாத்ரூமில் அவர் அழ, கவின் அவரைச் சமாதானப் படுத்த என நாடகத்தனமாக காட்சிகள் அரங்கேறியது. வழக்கம்போல், இந்த ரகளைக்கு காரணகர்த்தாவாக வனிதாவே இருந்தார். கொலைகாரி மீண்டும் கோபக்காரியாகி சண்டையை ஆரம்பித்து விட்டார். சேரனும், கவினும் பிக் பாஸின் அடுத்த அறிவிப்பு வரும் வரை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இங்கு நமக்கு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், கொலை செய்தவர் ஹாயாக வெளியில் சுற்ற, சம்பந்தமே இல்லாமல் யாரையோ பிடித்து ஜெயிலில் போட்டு விட்டாரே பிக் பாஸ் என்பது தான். கமலாவது இதைத் தட்டிக் கேட்கிறாரா எனப் பொறுத்திருது பார்க்கலாம்.