பிக் பாஸ் 3: பூதாகரமான 'இடுப்பு’ பிரச்சினை.. வழக்கம் போல் அடம் பிடித்த மீரா.. கதறி அழுத சேரன்!
பிக் பாஸ் வீட்டில் 32ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது மீரா பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் 32 நாட்களைப் போட்டியாளர்கள் கடந்து விட்டனர். இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கிராமம் டாஸ்க் விளையாடி வருகின்றனர்.
வழக்கம் போல, காலை நேர டான்ஸ் எல்லாம் முடிந்து, போட்டியாளர்கள் கீரிப்பட்டி, பாம்புப்பட்டி மக்களாக மாறினர். மைனர் சரவணன், கீரிப்பட்டிக்கும், பாம்புப்பட்டிக்கும் உள்ள பிளாஷ்பேக்கை கவின் மற்றும் சாண்டியிடம் விவரித்தார். சேரனின் மனைவி தான், கீரிப்பட்டி ஊர்த்தலைவி மதுமிதா என்றும், அவர்களது மகள் தான் லாஸ்லியா என்றும் புதுக்கதை ஒன்றை அவர் கூறினார்.
இது பற்றி உணவுக்கூடத்தில் மக்கள் பேசினர். சேரனும், மதுமிதாவும் ஒருபுறம் உணர்ச்சிபூர்வமாக நடித்துக் கொண்டிருக்க, கிடைத்த கேப்பில் ரேஷ்மாவும், லாஸ்லியாவும் கடமையே கண்ணாக திருட்டில் ஈடுபட்டனர்.
அடுத்த பஞ்சாயத்து:
அப்போது லாஸ்லியா மட்டும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். லாஸ்லியாவிடம் இருந்த பொருளை பறிக்க, மீரா, சாக்ஷி போன்றோர் முயற்சித்தனர். அப்போது இடையில் புகுந்த சேரன், மீராவை இழுத்து அந்தப் பக்கம் தள்ளி விட முயற்சித்தார். இதில் எதிர்பாராத விதமாக சேரனின் கை மீராவின் இடுப்பில் பட்டுவிட அடுத்த பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார் மீரா.
அழுத சேரன்:
சேரன் மீது மீரா கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் மனமுடைந்து போன சேரன், கட்டிலில் அமர்ந்து அழத் தொடங்கினார். வழக்கம் போல, பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீராவுக்கு எதிராகத் திரண்டனர். ஆனால், யார் பேசுவதையும் மீரா காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.
அலட்சியம்:
தொடர்ந்து சேரன் மீது புகார் சொல்வதிலேயே அவர் குறியாக இருந்தார். அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார் சேரன். நிலைமையை விளக்க முயற்சித்த முகெனையும் மீரா அலட்சியப் படுத்தினார். இதனால் அவரும் ஆத்திரமடைந்தார். பின் வழக்கம் போல் ஓரமாகச் சென்று மீரா அழுதார்.
ஊர்த்திருவிழா:
இந்த பரபரப்புகள் எல்லாம் அடங்கியதும் மீண்டும் கிராமம் டாஸ்க் தொடங்கியது. கீரிப்பட்டி மக்களை தங்கள் ஊர்த் திருவிழாவில் கலந்து கொள்ள முறைப்படி வந்து அழைத்தனர் பாம்புபட்டி மக்கள். நாட்டாமை சேரன் தலைமையில் மிகவும் கோலாகலமாக திருவிழா நடந்தது. மற்ற போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள்:
கிடைத்த கேப்பில் மீராவை கலாய்த்து அவர்கள் பாடினர். லாஸ்லியா மற்றும் மதுவின் நடனம் ரசிக்கும்படி இருந்தது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பொரி உருண்டை, முருக்கு என தின்பண்டங்கள் தின்றபடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர். இறுதியாக ஊர் திருவிழா முடிவடைய, நேற்றைய எபிசோடும் முடிவடைந்தது.