பிக் பாஸ் 3: வாண்டடாக ஜெயிலுக்கு போன லாஸ்லியா.. கோபத்தில் சாக்ஷியை அடிக்கப் பாய்ந்த கவின்!
பிக் பாஸ் வீட்டில் 33ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
சென்னை: ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் கிராமம் டாஸ்க் முடிந்து விட்டது. ஆனால் இந்த டாஸ்க்கிற்காக அவர்கள் பட்ட கஷ்டமெல்லாம் மதுவின் அஜாக்கிரதையால் ஒரே நிமிடத்தில் வீணாகி விட்டது.
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டிற்காக கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் கீரிப்பட்டி மற்றும் பாம்புப்பட்டி வாசிகளாக மாறி, கிராமத்து மக்களாகவே வாழ்ந்து வந்தனர்.
அடித்துக் கொண்டனர், பின்னர் ஒன்றாகக் கூடி திருவிழாவும் கொண்டாடினர். ஒரு வாரம் பிக் பாஸ் வீடே கிராமமாக மாறி இருந்தது. நாட்டாமையாக அனைவரின் பகைமைக்கும் ஆளானார் சேரன்.
நேற்று காலையிலெயே ஒரு வழியாக கிராமம் செட் எல்லாத்தையும் கழட்டி விட்டனர். ஒரு வழியா லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் முடிந்து விட்டது என போட்டியாளர்களைப் போலவே நாமும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். பார்த்தால் அடுத்த பிரச்சினைக்கு தயாராகி விட்டார் பிக் பாஸ்.
வழக்கம் போல், இந்த டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. சம்பந்தமே இல்லாமல் மீராவின் பேரை வழிமொழிந்தனர். இதனால் பெரும் பிரச்சினையில் சிக்கிய சேரன், மதுமிதா போன்றோருக்கு கடும் அதிர்ச்சி. பின்னர் அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டிக்கு மீரா, தர்ஷன் மற்றும் முகென் தகுதி பெற்றுள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார்.
பின் இந்த வாரம் டாஸ்க்கை சரியாக விளையாடாதவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. வழக்கம் போலவே லாஸ்லியா, 'நான் தான்.. நான் தான்’ என தானாக ஆஜர் ஆனார். கூடவே அபியும். ஆனால், லாஸ்லியாவை சிறைக்கு அனுப்ப விரும்பாத கவினும், மீராவும், சாக்ஷி மற்றும் ஷெரீன் தான் சரியாக விளையாடவில்லை என புது பிரச்சினைக்கு தூபம் போட்டனர்.
அவர்கள் நினைத்தது போலவே பற்றிக் கொண்டது பிக் பாஸ் வீடு. சாக்ஷி ஒருபுறம் அழுது கொண்டு செல்ல, ஷெரீன் மற்றொரு பக்கம் அழுது கொண்டே புலம்ப, இடையில் மீராவும் தன் பங்கிற்கு கத்தினார். ஆனால், 'காரணமே இல்லாம என்னை அஞ்சு வாரமா நாமினேட் பண்றீங்களே. நான் என்ன கோவிச்சுக்கறேனா..?’ என மீரா கேட்ட கேள்வியை, ரெண்டு ஜெலுசில் பாட்டிலைக் குடித்தாலும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்தக் களேபரங்களுக்கு இடையே, 'ஏ நாங்களும் ரவுடி தான்.. ஜெயில்லுக்கெல்லாம் போறோம் பாரு’ என ஜாலியாக கைதி டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர் லாஸ்லியாவும், அபியும். உள்ளே நுழைந்ததுமே அவர்களுக்கு காபி கொடுக்கப்பட்டது. உடனே பிக் பாஸ், இனி ஜெயிலுக்கு போறவங்களுக்கு சாப்பாடு நாங்க தான் தருவோம்’ என புதிய உத்தரவிட்டார். அதன்படி கிண்ணத்தில் பழைய சோறு ரேஞ்சுக்கு ஏதோ கொடுக்கப்பட்டது.
சிறந்த போட்டியாளராக மீராவை சொன்னது தப்பு என சேரனும், மதுவும் சண்டை போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மீரா, வேணும்னா மதுவை தலைவர் போட்டிக்கு நிக்க சொல்லுங்க என்றார். ஆனால் அப்போதும் சேரன் பேரை அவர் சொல்லவேயில்லை. கடைசியில் வீட்டின் கேப்டன் தான் பிக் பாஸிடம் இது பற்றி சொல்ல வேண்டும் என ரேஷ்மாவையும் இந்தப் பிரச்சினையில் கோர்த்து விட்டனர்.
பின்னர் லக்ஸரி டாஸ்க்கில் பெற்ற மதிப்பெண்களுக்கு பொருட்களை வாங்கும் படலம். ஆளாளுக்கு மட்டன், சிக்கன் என ஆர்டர் தர, கடைசி நேர அலட்சியத்தால் மொத்த மதிப்பெண்ணும் பறி போனது. மது செய்த தவறால்தான், லக்ஸரி பட்ஜெட் மிஸ் ஆனது. ஆனால், அதை மற்ற போட்டியாளர்கள் அலட்டிக் கொள்ளவேயில்லை.
இவிங்க எதுக்கு கோபப்படுவாங்க.. எதுக்கு மாட்டாங்கனு புரிஞ்சுக்கவே முடியலையே பிக் பாஸ்... உண்மையிலேயே இவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா?