நான் கேட்பேன்... பிக்பாஸ் வீட்டில் ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்.. மநீமவில் ஐக்கியமாகிறாரா ஆரி?
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைவது தொடரும் போல தெரிகிறது. இந்த முறை பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி மக்கள் நீதி மய்யத்தில் இணையக் கூடும் என தெரிகிறது.
பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்ற கவிஞர் சிநேகன் (சினேகன்), கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனன் வெற்றியை சொந்த அண்ணன் ஜெயித்தது போல கொண்டாடும் நெட்டிசன்ஸ்
மநீமவில் ஆரி?
தமிழகம் முழுவதும் கமல்ஹாசனுடன் இணைந்து சிநேகனும் (சினேகன்) பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் தற்போது முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் நடிகர் ஆரியும் மநீமவில் இணைவதற்கான சாத்தியங்கள் உண்டு என கூறப்படுகிறது.
நேர்மையும் ஆரியும்
பிக்பாஸ் வீட்டில் நேர்மையை வலியுறுத்தி அதனால் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதேநேரத்தில் மக்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்றவர் ஆரி. அவருக்கு ஆதரவாக பலமுறை கருத்துகளை முன்வைத்திருந்தார் கமல்ஹாசன்.
ஸ்கெட்ச் போட்ட கமல்
இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஆரி, பாலாஜியுடன் உரையாடிய கமல்ஹாசன், நான் கேட்பேன் என்பதை வெளியிலும் வந்து நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்படி கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதே தம்முடன் மநீமவில் பயணியுங்கள் என்பதை காட்டுவதாகவே இருந்தது.
விரைவில் ஐக்கியம்?
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆரியும் பிக்பாஸ் மேடையில், நீங்கள் எனக்கு முன்னுதாரணம்.. எனக்கு இப்போது கூடுதல் பொறுப்பு இருக்கிறது.. வெளியே சென்றும் நேர்மைக்காகவும் மக்கள் பிரச்சனைக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார். அனேகமாக வெகுசீக்கிரம் ஆரியும் மநீமவில் இணைந்து கமல்ஹாசனுடன் பிரசாரத்துக்கு வரக் கூடும் என தெரிகிறது.