பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? இந்த கணக்கை பாருங்க.. ப சிதம்பரம் அதிரடி
சென்னை: எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து உறுதியுடன் செயல்பட்டால் பாஜகவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்றும் பீகார் சட்டமன்ற தேர்தலில் அது நிரூபிக்கப்படும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் முதல்கட்ட தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மாலையுடன் 94 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த தேர்தலில் ஆளும் ஜக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன்இணைந்து செயல்பட்டால் நிச்சயம் பீகார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்,
இது தொடர்பாக ப சிதம்பரம் கூறுகையில். 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு குறைந்து கொண்டே வந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.
பீகார்: 2ம் கட்ட வாக்குப் பதிவு இடங்களில் இன்று பிரசாரம் ஓய்வு! மோடி 4 கூட்டங்களில் பங்கேற்பு
2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை தொடர்ந்து 381 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில் 51 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிந்துள்ளது. இந்த 381 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது 319 தொகுதிகளில் மட்டும் தான். இந்த கணக்கில் ஒருதரம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் பாஜகவை தோற்கடிக்க முடியாதா?
முதலில் பாரதீய ஜனதாக் கட்சியை மண்ணைக் கவ்வ செய்யமுடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கை பீகாரில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை மகா கூட்டணியாக இணைந்திருக்கின்றன. இந்தக் கூட்டணி பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்" இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.