“நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்” - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
சென்னை : பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், "நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்." என பதில் அளித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.
பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பீகார் அரசியல் குறித்து, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனப் பாராட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
திமுகவுடன் நட்பைப் பேணி வரும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஸ்டாலினின் வாழ்த்துக்கு 'நன்றி அண்ணா' குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார்.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.. நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
பீகாரில் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆர்ஜேடி, காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ள்ளார். நிதிஷ் குமாருக்கு பீகார் ஆளுநர் பகு சவுகான் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் குமாரை தொடர்ந்து பீகார் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் காக்கும் வகையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியாக மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் பதில்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நன்றி அண்ணா! இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களுக்கு இன்று முதல் பின்னடைவு தொடங்குகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
திமுக - ஆர்ஜேடி நட்பு
திமுக - ராஷ்டிரிய ஜனதா தளம் நட்பு பல்லாண்டு காலமாகவே தொடர்ந்து வருகிறது. தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நீண்டகால நட்பைப் பேணியவர், மு.க.ஸ்டாலின் உடனும் நட்பு பாராட்டியவர். அவரது மகன் தேஜஸ்வி யாதவும் திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளவர். இந்நிலையில், தேஜஸ்வியின் இந்த ட்விட்டர் பதிவு திமுகவினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்டாலினை புகழ்ந்த தேஜஸ்வி
சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு நிகழ்வுக்காக சென்னை வந்திருந்த தேஜஸ்வி யாதவ், 'சமூக நீதி பற்றிய எங்கள் பார்வைக்கு தமிழ்நாடே உந்து சக்தி. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் எங்களுக்கெல்லாம் முன்னோடி தலைவர்கள். சமூக நீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே ஸ்டாலினின் திராவிட மாடல்' என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருந்தார்.