பாத்துட்டே இருங்க.. "கழட்டி" விடறாங்களா இல்லையான்னு.. போட்டுத் தாக்கிய குஷ்பு!
சென்னை: வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் என பாஜகவின் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் இந்த முறை தேர்தலை சந்தித்தன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் முடிவுகளும் காலையில் இருந்து வெளியாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி, பிறகு திடீரென பின்தங்கிவிட்டது... இப்போதைக்கு பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
ரிசல்ட்டுகள்
இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றாலும், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு கூடிவருகிறது.. எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியதாக ரிசல்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பெரிய மாற்றம்
தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில், "வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டலாம்.. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... கூடுதல் சுமை என்று நினைத்து, அகில இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை" என்று கிணடல் அடித்துள்ளார்.
அதிருப்தி
கடந்த டெல்லி தேர்தலின்போது, காங்கிரஸ் மண்ணை கவ்வியபோதே, குஷ்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.. சொந்த கட்சி என்றும் பாராமல், "நாம் போதிய அளவிற்கு செயல்பட்டு வருகிறோமா? சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறோமா? இனியாவது நாம் நமது செயலை துவக்க வேண்டும்'' என்று குஷ்பு பதிவிட்டது அப்போதைய காங்கிரஸ் தலைவர்களுக்கு கொந்தளிப்பையே ஏற்படுத்திய நிலையில், தற்போது இன்னும் பகிரங்கமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கேள்வி
ஆனால், குஷ்புவின் இந்த ட்வீட்டுக்கு, பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "ஏம்மா.. யார் யாரை வெச்சிக்கிறாங்க, கழட்டி விடறாங்கன்னு புரோக்கர் வேலை பார்க்கிறதுதான் உங்க வேலையா? இன்னும் புள்ளையே பொறக்கல, அதுக்குள்ளே பேரு வெக்கறீங்களே என்றும் வெறும் 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் இருக்கிறார்கள்.. எப்படி இப்பவே முடிவு செய்தால் எப்படி?" என்றும் ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.