சென்னையில் பெண் உயிரை பறித்த பைக் ரேஸ்.. 2 வயது குழந்தை, விமான நிலைய அதிகாரி காயம்
Recommended Video
சென்னை: தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கத்தில், மொத்தம் 2 டூவீலர்கள், நேருக்கு நேர் மோதியதில், பெண் பலியானார். அவரது கணவர் மற்றும் இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். சென்னை விமானநிலையத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் தனது மனைவி புவனேஸ்வரி (52) மற்றும் தனது 2 வயது பேரனுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார்.
அப்போது ராஜகீழ்பாக்கம் சிக்னலை கடக்க முற்பட்டபோது, மற்றொரு இரு சக்கர வாகனம் அதி வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. அந்த பைக், அதிவேகமாக, சுப்பிரமணியம், சென்ற பைக்கில் மோதியதில் புவனேஸ்வரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சுப்பிரமணியம், மற்றும் பேரனும் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
கேரளாவை அதிர வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவம்.. 4 'கணவர்களுக்கு' நீதிமன்ற காவல்
இதில் புவனேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக, உயிரிழந்தார். காயமடைந்த பிற இருவரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் புவனேஸ்வரி உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது, சோகத்தில் ஆழ்த்தியது.
போலீஸ் விசாரணையில், சோழிங்கநல்லூரை சேர்ந்த சதீஷ் (26) என்பவர்தான், தனது பைக்கில் வேகமாக சென்று, சுப்பிரமணியம் ஓட்டிய பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. சதீஷ் ரேஸில் ஈடுபட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இப்படி ரேஸில் ஈடுபடுவதை போலீசார் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.