இருமொழிக் கொள்கைதான்.. மும்மொழிக் கொள்கை இல்லை.. செங்கோட்டையன் திட்டவட்டம்
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம்மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. 3வது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது.
இந்தி என்ற கட்டாய கலப்படத்தை திணித்தால் திமுக போர் தொடுக்கும்... ஸ்டாலின் காட்டம்
கல்வியாளர்கள் எச்சரிக்கை
இதனை மத்திய அரசு அமல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி தேசிய அளவில் கல்வி ஆணையம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்து இருப்பதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சியப் பயணம்
இந்நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் எங்கள் லட்சியப்பயணமாக இருக்கிறது என்றார்.
வீறுநடை போடும்
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழகத்தில் வீறுநடை போடும் என்றும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர முடியுமென மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசுக்கு கடிதம்
3 வது மொழியை மத்திய அரசு வலியுறுத்திய போது, மாநில அரசின் நிலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம் 12 ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்பட்ட பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது என்று கூறிய அவர், புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.