மக்கும் கழிவிலிருந்து உரம் வந்தாச்சு.. அடுத்து அதிலிருந்து இயற்கை எரிவாயு.. சென்னையில் பலே திட்டம்!
சென்னை: மக்கும் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதை தொடர்ந்து இனி அவற்றிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைகள் ஜூலை முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கல்வி, அடிப்படை கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், மாநகராட்சியின் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது. எனினும் இங்கு திடக்கழிவு மேலாண்மையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தலைநகர் சென்னை.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
பெருங்குடி, கொடுங்கையூரில் பெரிய மலை போல் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கியுள்ளன. இவற்றால் மழை பெய்தால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னை
மக்கள்தொகை அதிகம் கொண்ட சென்னையில் நாள்தோறும் 5000 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கிடங்குகளில் கழிவுகளை தேக்கி வைப்பதை குறைக்க மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி விற்பனை செய்து வருகிறது.
காய்கறி கழிவுகள்
இதையடுத்து மக்கும் தன்மை கொண்ட காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. தனியார் பங்களிப்பு மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் தினந்தோறு்ம 100 டன் திடக்கழிவுகளை கையாள கூடிய 7 இயற்கை எரிவாயு ஆலைகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
இயற்கை எரிவாயு
சென்னையில் சேத்துப்பட்டில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு ஆலை ஜூலை மாதம் முதல் செயல்பட உள்ளது. குடியிருப்புகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் நேரடியாக கொள்முதல் செய்து சேத்துப்பட்டு ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.
கழிவுகள்
இந்த கழிவுகள் இயந்திரங்கள் மூலம் ஊழியர்கள் உதவியுடன் தரம் பிரிக்கப்படும். இவை மாட்டு சாணத்துடன் 45 நாட்களுக்கு பதப்படுத்தி மீத்தேன் எரிவாயுவை உற்பத்தி செய்யலாம். இதன்படி தினந்தோறும் 4000 கிலோ மீத்தேன் எரிவாயு, 1500 கிலோ இயற்கை உரம் சேத்துப்பட்டில் மட்டும் உற்பத்தி செய்யலாம்.
சுற்றுச்சூழல்
இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது. மேலும் எல்பிஜி எரிவாயுவை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை சமையலுக்கும் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம். 7 இயற்கை எரிவாயு ஆலைகளும் செயல்பாட்டு வரத் தொடங்கினால் தினமும் 700 டன் கழிவுகள் என ஒரு மாதத்திற்கு 21 ஆயிரம் டன் கழிவுகள் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வது குறையும். இதனால் கிடங்குகளில் மலை போல் குப்பைகள் தேங்குவது குறையும்.