பிறந்தநாள் விழாவில் மது பார்ட்டி.. போதையில் நடந்த விபரீதம்.. மாணவர் பலி.. பதைபதைக்கும் வீடியோ பகீர்
சென்னை: செம்பரம்பாக்கத்தில் மது போதையில் கல்லூரி மாணவர் 8- ஆவது மாடியில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (21). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.டெக் பயோ மெடிக்கல் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். கடந்த 16-ஆம் தேதி இரவு பக்கத்து அறையில் தங்கி உள்ள நண்பரின் பிறந்த நாள் என்பதால் அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
மாற்று ஜாதி பெண்ணுடன் மகன் திருமணம்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் தாக்கும் பகீர் வீடியோ
நவீன்குமார்
இவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் நவீன்குமார் தங்கியுள்ள அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்துள்ளது. அவர்கள் அதிக போதையில் இருந்ததாலும் அந்த அறையில் அதிக நண்பர்கள் இருந்ததாலும் இங்கு தூங்க வேண்டாம் என நவீன்குமார் நினைத்தார்.
8ஆவது மாடி
இதையடுத்து தனது அறைக்கு செல்வதற்காக எட்டாவது மாடியில் உள்ள பிறந்த நாள் கொண்டாடப்பட்ட அறையின் பின் வழியாக உள்ள பைப்பை பிடித்து கொண்டு சென்றால் நவீன்குமார் தங்கியுள்ள அறையின் பின் பக்கம் சென்று விடலாம் என்பதால் போதையில் இருந்த நவீன்குமார் வழக்கம்போல் அறையின் பின்புறம் வழியாக சென்றுள்ளார்.
நிலைத்தடுமாறி நவீன்குமார்
அப்போது மிகுந்த போதையில் இருந்த நவீன்குமார் நிலைதடுமாறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.அதில் மது போதையில் வரும் மாணவர் நவீன் அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அருகே இருந்த நண்பர் அவரை அழைத்து சென்றார். பின்பு மீண்டும் வந்து சுவர் மீது தாவும் போது கீழே விழுவது பதிவாகியுள்ளது.
விசாரணை
இந்த காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாடியிலிருந்து நவீன் ஏன் குதிக்க முயற்சித்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் போதையில் இந்த சம்பவம் நடந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. போதையில் மாணவர்கள் கும்மாளமடித்துவிட்டு கடைசியில் போதையால் ஒரு மாணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.