நாட்டின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத் நினைவுத் தினம் இன்று! மனதை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து!
சென்னை: நாட்டின் முதல் முப்படைத் தளபதியாக திகழ்ந்த பிபின் ராவத்தின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தது நாட்டு மக்களின் மனதை உலுக்கும் வகையில் இருந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு செல்லும் போது பிபின் ராவத் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கண்ணீரை வரவைத்த காட்டேரி.. பிபின் ராவத்தை கவுரவப்படுத்த வந்தது அறிவிப்பு.. பூரிக்கும் நீலகிரி
பிபின் ராவத்
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாகவும், முன்னாள் ராணுவத் தளபதியாகவும் இருந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உலுக்கும் வகையில் அமைந்திருந்தது. பிபின் ராவத்துடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
மோசமான வானிலை
சூலுர் விமான படைத்தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர், குன்னூரை சென்றடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது நிகழ்வு குன்னூர் சுற்றுவட்டார மக்களை குலை நடுங்க வைத்தது. அந்தளவுக்கு பேரிடியான சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது. மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.
முதலாண்டு அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட உருவர் உயிரைக் கூட காப்பாற்ற முடியாமல்க் போனது துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பிபின் ராவத்தை நினைவு கூறும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் விளக்கம்
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.