காங். போல் இங்கு கோஷ்டிகள் வேண்டாம்... நிர்வாகிகளுக்கு ஜே.பி.நட்டா அட்வைஸ்
சென்னை: தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மூத்த நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்தினாராம்.
கட்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னை வந்த அவர் தமிழக பாஜக செயல்பாடு பற்றி விரிவாக விவாதித்துள்ளார்.
அப்போது கடந்த 3 மாதமாக தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி அதை பற்றியும் பேசியிருக்கிறார்.
பாஜகவின் அரசகுமார் நேர்மையாக பேசி இருக்கிறார்.. நன்றி.. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!
கட்சி நிகழ்ச்சி
தமிழக பாஜகவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சொந்த அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றி சீரியஸாக விவாதித்துள்ளார்.
3 மாதகாலம்
தமிழக பாஜகவுக்கு தலைவர் இல்லாததால், ஆளாளுக்கு நாட்டாண்மை செய்வதாக ஏற்கனவே நட்டாவுக்கு புகார்கள் சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் அந்த புகார் கடிதங்கள் பற்றி விசாரித்ததுடன், இனி கோஷ்டிப்பூசல்கள் இங்கு இருக்கக் கூடாது, தொடர்ந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
கவலை
மேலும், தமிழகத்தில் பாஜக குறிப்பிடும் படி வளர்ச்சி அடையவில்லை என்றும், கட்சியின் தேக்க நிலைக்கு என்ன காரணம் எனவும் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். மத்தியில் நமது ஆட்சி நடைபெறுகிறது, மாநிலத்தில் நமது கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது அப்படியிருந்தும் கட்சி வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கவலை தெரிவித்தாராம்.
10 நாட்களில்
ஜே.பி.நட்டா நேற்றைய தினம் நிர்வாகிகள் மத்தியில் பேசியதை வைத்து பார்த்தால் இன்னும் 10 நாட்களில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்க மிக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார் பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர்.