அதிமுகவின் அதிரடி வியூகம்.. எப்படி தகர்க்க போகிறது திமுக.. என்ன செய்ய போகிறார் மு.க.ஸ்டாலின்?
மு.க.ஸ்டாலினுக்கு எதிராகஅதிமுக-பாமக-பாஜக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
சென்னை: ஜெயிக்குதோ இல்லையோ, அதிமுக-பாஜக-பாமக என்ற மெகா கூட்டணி தமிழகத்தில் உருவாகி உள்ளது. இது கண்டிப்பாக திமுகவுக்கு நெருக்கடி மற்றும் பாதகமான சூழலை உருவாக்கி தரும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
கடந்த முறை தனித்து போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதனால் பிரதான கட்சிகள் யாருமே தங்களை கூப்பிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினாலும், இன்னும் பிற காரணத்திற்காகவும் 3-வது அணி ஒன்று உருவானது.
இதில் பாமக, தேமுதிக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இவர்களுக்கு பெரும் வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட 2 தொகுதிகளில் வென்றனர். தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக பார்க்கப்படும் பிரதான கட்சியான பாஜக, கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய செல்வாக்கையும் ஆட்சியையும் பல மாநிலங்களில் விஸ்தரிக்கும் வேலையில் இறங்கியது.
களப்பணியில் பாமக
அந்த வகையில் பாஜக தொடர்ந்து களப்பணியை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது. ஒருமுறை இது சம்பந்தமாக தமிழிசை சவுந்தராஜன் சொல்லும்போதுகூட, "பாஜகவை ஸ்டாலினால் முடக்கவும், அடக்கவும் முடியாது. ஏனென்றால் ஒரு இடத்தில் ஜெயித்திருந்தாலும், 19.5 சதவீதம் வாக்குகளை கூட்டணியாக நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்றார். அதனால் கன்னியாகுமரியை தவிர இந்த முறை கோவையில் வெற்றி வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளதால், குறைந்தது 2 சீட்டையாவது பாஜக பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது.
3-வது இடம்
அடுத்ததாக பாமகவை எடுத்துகொண்டால், 15 வருடங்கள் கழித்து கூட்டணி வைத்துள்ளது அதிமுக. கடந்த முறை பாமக 5.3 சதவீத வாக்குகளை அதாவது பாஜகவைவிட அதிகம் பெற்றிருந்தது. போனமுறை 85 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைய முக்கிய காரணமே பாமகதான். 27 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பறித்த பாமக, பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்தது.
வெற்றி வாய்ப்பு
அந்த வகையில் பார்க்கும்போது, இப்போது பாமகவின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என்றே தெரிகிறது. திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் வரை, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை விழுப்புரத்திலிருந்து கடலூர் வரையிலான தொகுதிகளில் தனது செல்வாக்கை இந்த 3 ஆண்டுகளில் பலப்படுத்தி வந்திருக்கிறது பாமக. அதனால் வட மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும். சேலம் மாவட்டத்திலும் பாமகவின் துணை அதிமுகவுக்கு கை கொடுக்கும்.
ஐயப்பாடுகள்
எப்படி பார்த்தாலும் ஜெயலலிதா இல்லாத ஒரு நிலையில், அதிமுக தலைமை பலவீனப்பட்டுவிடுமோ, தனித்து விடப்படுமோ, கூட்டணிக்கு நிறைய தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து மண்டியிட வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற ஐயப்பாடுகள் எழுந்து வந்தன. வாக்கு வங்கிக் கணக்கு அடிப்படையில் பாமக, பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்கி அசத்திவிட்டிருக்கிறது அதிமுக. தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் தவிர இதில் இன்னமும் வேறு கட்சிகள் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது.
பிரகாசமான வாய்ப்பு
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, தேமுதிக, பாஜகவின் செயல்திறன் அடிப்படையில் பார்க்கும்போது வரவிருக்கும் தேர்தலில் அக்கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்குமேயானால் அது நிச்சயமாக வடக்கு, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றே சொல்ல வேண்டும்.
ஸ்டாலின் சமாளிப்பாரா?
இப்படி ஒரு மெகா கூட்டணி உருவாகி உள்ளதால், இவை டெபாசிட் இழக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை வாய்ப்பு அடியோடு குறையலாம். அதே நேரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை எப்படி ஸ்டாலின் சமாளிக்க போகிறார்? காங்கிரசுக்கே அள்ளி தர மனமில்லாமல் கிள்ளி தர யோசித்து வரும்போது, பிரமாண்ட கூட்டணி எப்படி உருவாகும்? அதிமுகவுக்கு மாற்றான ஒரு நடவடிக்கையை எப்படி முன்னெடுக்க போகிறார் என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.