முறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி? நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது? அக்கா இப்படி சொல்லியிருக்காங்களே!
Recommended Video
சென்னை: பாஜகவும் அதிமுகவும் நட்புறவோடுதான் உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று அனைத்து மாநில பாஜக தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமித்ஷாவே மீண்டும் பாஜக தேசிய தலைவராக நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டது.
பல மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல்கள் வர இருப்பதால் அமித்ஷாவே பாஜக தலைவராக நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் தனித்து வெற்றி பெற்றாலும், பல மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ரஜினிகாந்த், ஜிகே வாசன், ஒருங்கிணைந்த அதிமுக.. இத்தனை முதுகில் சவாரி செய்ய போராடும் பாஜக!
நேற்றைய கூட்டம்
இந்த விவகாரம் கட்சிக்கு தலைமை பெரும் நெருடலை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
பெரும் பின்னடைவு
தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிமுகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.
37 தொகுதிகளில் வெற்றி
2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம்
இந்நிலையில் இம்முறை மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
சென்னை திரும்பிய தமிழிசை
அதிமுக கட்சிக்குள்ளேயே பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
நட்புறவோடு உள்ளது
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போது பாஜக - அதிமுக நட்புறவோடுதான் உள்ளது என்றார்.
நட்புறவை புரிந்துகொள்ள வேண்டும்
தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவதுதான் கூட்டணி என்றும் அவர் விளக்கம் அளித்தார். அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்ததன் மூலம் அதிமுக-பாஜக நட்புறவை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி அவசியமில்லை
அனைத்து நேரங்களிலும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார். மத்திய மாநில அரசுகள் நட்புறவோடு இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றும் தமிழக பாஜக தலைவரான தமிழிசை தெரிவித்தார்.
கூட்டணிக்கு முடிவு?
டெல்லி சென்று திரும்பிய தமிழிசை திடீரென பாஜக - அதிமுக நட்புறவோடுதான் உள்ளது என்றும் எப்போதும் கூட்டணியில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என கூறியிருப்பதன் மூலம் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.