பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே சித்தாந்தம்- இரட்டை குழல் துப்பாக்கி...நயினார் நாகேந்திரன் ஒரேபோடு!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் ஒரே சித்தாந்தம் கொண்டவை; இரண்டு கட்சிகளும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகின்றன என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் பாஜகவை வேண்டா வெறுப்பாகவே சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ திடீரென அதிமுகவை புகழ்வதும் விமர்சிப்பதும் என மாறி மாறி சித்து விளையாட்டு விளையாடுகின்றனர்.
ஓபிஎஸ் சொந்த கட்சிக்காரர்களுடன்தானே பேசினார்.. அது தவறு இல்லையே - சமாளிக்கும் ஜெயக்குமார்
பாஜக- அதிமுக இரட்டை குழல் துப்பாக்கிகள்
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என ஒருபக்கம் பேசியும் வருகிற்து பாஜக. இப்போது அதிமுகவும் பாஜகவும் ஒரே சித்தாந்த கட்சிகள்; இரட்டை குழல் துப்பாக்கிகள் என அடுத்த பாய்ச்சலில் குதித்துவிட்டது பாஜக.
ஒரே சித்தாந்த கட்சிகள்
பாஜகவின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது: பாரதிய ஜனதா கட்சியும் அண்ணா திமுகவும் வெவ்வேறான கட்சிகள் அல்ல. இரண்டும் வேறு கட்சிகள் என்றெல்லாம் சொல்லவும் முடியாது. இரண்டுக்கும் ஒரே சித்தாந்தம்தான்.
அசைவத்தை அதிகமாக சாப்பிடுங்க
பாஜகவும் அண்ணா திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இந்த கட்சிகளின் கூட்டணியை பிரிக்கவும் முடியாது. ஆளுங்கட்சியாக வரவேண்டும் என்றால் அசைவம் சாப்பிட வேண்டும் . அப்படி சாப்பிட்டால்தான் தெம்பாக வேலை செய்ய முடியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஒற்றை தலைமைதான் அவசியம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கட்சியின் அகில இந்திய தலைமை என்ன கருத்தை முன்வைக்கிறதோ அதை ஏற்று நாங்கள் செயல்படுவோம். எந்த கட்சியும் ஒற்றை கருத்துடன் ஒற்றை தலைமையுடன் இயங்க வேண்டும் என்றார் நயினார் நாகேந்திரன்.