"காவி".. துணிச்சலாக பேசிய "அசுரன்" வெற்றிமாறன்.. பாய்ந்து வரும் பாஜக.. அதே "ஜோசப் விஜய்" பார்முலா?
சென்னை: நம்முடைய அடையாளங்களை அழிக்கிறார்கள்.. காவியை புகுத்துகிறார்கள் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசியது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரி ஆதரவாளர்கள் வெற்றிமாறன் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதே சமயம் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர் பலர் வெற்றிமாறன் பேசியது சரிதான் என்று அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா பொதுவாகவே அரசியல் கலந்து காணப்படும் துறைதான். 1950 களில் இருந்தே தமிழ் சினிமாவில் காட்டமான அரசியல் பேசப்பட்டு இருக்கிறது. இடையில் சில காலம் விடுபட்ட இந்த அரசியல் கடந்த சில வருடங்களாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
முக்கியமாக இயக்குனர் பா. ரஞ்சித் வருகைக்கு பின் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாத தலித் வாழ்வியல், அம்பேத்காரியம் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கம்யூனிசம், திராவிட சித்தாந்தம், தலித் அரசியல் மூன்றையும் தனது திரை மொழி மூலம் பேசக்கூடிய இயக்குனர்தான வெற்றிமாறன்.
கோபப்பட்ட “ஜிவிஎம்”.. நெகட்டிவா? விமர்சகர்களுக்கு “சுதந்திரம்” தேவை - “கூலாக” பதிலளித்த வெற்றிமாறன்
வெற்றிமாறன்
பொல்லாதவன் படத்தில் நேரடியாக அரசியல் பேசவில்லை என்றாலும்.. அதன்பின் வந்த அனைத்து படங்களிலும் வெற்றிமாறன் வெளிப்படையாக அரசியல் பேசி இருந்தார். ஜாதியை கேள்வி எழுப்பி இருக்கிறார். வர்க்க வேறுபாட்டை கேள்வி எழுப்பி இருக்கிறார். சிஸ்டத்தை கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்போது அவர் எடுத்து வரும் விடுதலை படம் கூட நக்சலைட் பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் படம்தான். இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழாவில் வெற்றிமாறன அரசியல் பேசினார்.
வெற்றிமாறன் அரசியல்
வெற்றிமாறன் இதில் பேசிய சில விஷயங்கள்தான் தற்போது தமிழ் அரசியல் மற்றும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு தற்போது மதசார்பற்ற இருக்கிறது. அதனால்தான் ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவம் நம்மிடம் உள்ளது. தமிழ்நாடு இப்படி திராவிட அரசியல் காரணம். சினிமாவில் அரசியல் வேண்டும். சினிமாவை அரசியல்படுத்த வேண்டும். இது மிக முக்கியம்.
கலை அரசியல்
நம்மிடம் உள்ள அடையாளங்களை நம்மிடம் தக்க வைக்க அரசியல் வேண்டும். கலையில் அரசியல் இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று கூறுகிறார்கள். இப்படி தொடர்ந்து நம்முடைய அடையாளங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சினிமாவில் கூட அடையாளங்களை பறிக்கிறார்கள். இதை நாம் தடுக்க வேண்டும். அதற்கு அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும், என்று வெற்றிமாறன் குறிப்பிட்டு இருந்தார்.
பாஜக
இந்த நிலையில்தான் வெற்றிமாறன் பேச்சை பாஜகவினர், இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் ஏன் சிவனுக்கு கோவில் கட்டினார் என்றெல்லாம் கேள்வி கேட்டு விமர்சனங்களை வைக்கின்றனர். அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.. சைவம் - வைணவம் இருந்தது என்பதை அறியாமல் பலர் வெற்றிமாறன் தவறாக பேசிவிட்டதாக கூறி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதோடு இவர் கிரிஸ்துவர் என்றும் விமர்சனங்களை வைக்கின்றனர்.
விஜய்
நடிகர் விஜய் அரசியல் பேசிய போது, ஜிஎஸ்டிக்கு எதிராக வசனம் வைத்த போது, அவரை ஜோசப் விஜய் என்று பாஜக எச். ராஜா விமர்சனம் செய்தார். அவர் கிறிஸ்துவர் என்பதால் இப்படி விமர்சனம் வைக்கிறார் என்று, இந்த விஷயத்தை மத ரீதியாக மாற்றினார்கள். அதன்பின் நடிகர் சூர்யாவும் கூட ஜெய் பீம் படத்தில் ஜாதிக்கு எதிராக நடித்து இருந்தார். இதனால் அவர் வேற்று மத பெண்ணை (ஜோதிகா - அவரை அம்மா முஸ்லீம்) திருமணம் செய்து கொண்டார். அதனால் இப்படி பேசுகிறார் என்று மத ரீதியாக இந்த விஷயத்தை மாற்றினர்.
பார்முலா
தற்போது அதே ஜோசப் விஜய் பார்முலாவை கையில் எடுத்து.. வெற்றிமாறன் கிறிஸ்துவர் என்று கூறி விமர்சனமா செய்து வருகின்றனர். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும்.. வலதுசாரிகள் பலர் இணையத்தில் இந்த விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதோடு அவரை கடுமையான சில வார்த்தைகள் சொல்லியும் திட்டி வருகின்றனர். சினிமா துறையில் உள்ள வலதுசாரிகள் சிலரும் கூட வெற்றிமாறனை விமர்சனம் செய்துள்ளனர்.
எச். ராஜா
பாஜக எச். ராஜாவும் வெற்றிமாறனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும், என்று காட்டமாக வெற்றிமாறனை குறிப்பிட்டு உள்ளார். அதே சமயம் இடதுசாரிகள், மத சார்பற்றவர்கள் பலர் வெற்றிமாறன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் சரியாகத்தான் பேசி இருக்கிறார். அவரிடம் இருக்கும் அரசியல் தெளிவு பலருக்கு இல்லை என்று பதிலடி கொடுத்து உள்ளனர்.