பாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன..? ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்!
சென்னை: பாஜக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு இருவருமே, திரைமறைவில் நடைபெற்ற பல்வேறு ரகசியங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேட்டியில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பலமான ஒரு சிறுபான்மையின வேட்பாளரை களமிறக்குமாறு கருப்பு முருகானந்தம் என்பவர் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு தூது விட்டார் என கூறியிருந்தார்.
இந்துக்கள்-கிறிஸ்வர்கள் என இரு பிரிவாக கன்னியாகுமரியில் வாக்காளர்கள் பிரிந்து இருப்பதால், கிறிஸ்தவ வாக்குகள் மொத்தமாக காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் இதை பிரிக்க தினகரனை பொன்.ராதாகிருஷ்ணன் பயன்படுத்த திட்டமிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சம்.
ஸ்டாலினை பார்க்க பாவமா இருக்கு... வடிவேலு பாணியில் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
தொலைபேசியில் பேச்சு
இந்த குற்றச்சாட்டை மறுத்து, பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கூறியதாவது: 20 நாட்கள் முன்பு டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், கன்னியாகுமரி தேர்தல் தொடர்பாக அவருடன் பேசவில்லை. பாஜகவுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தினகரன் உள்பட அவரிடமுள்ள பலர் முயற்சி செய்தனர். அவர்கள் பெயரையும், இடங்களையும் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும். அவரைப் போல நாகரீகமற்றவனாக இருந்தால் சொல்லிவிடமுடியும். இப்போதும் கூட அவர் விருப்பப்பட்டால் நான் அதையெல்லாம் வெளியே சொல்ல தயார்.
சந்திக்க திட்டம்
எங்கெங்கே விமானத்தில் வருகின்றேன் என்று சொன்னார்கள்.. காரில் வந்து பெங்களூரில் சந்திக்க முடியுமா என்று கேட்டது.. யார் யார் வந்து சந்தித்துள்ளார்கள்.. இதைப் பற்றிய விவரங்களை எல்லாம் நாங்கள் வெளியிட்டோம் என்று சொன்னால், இவர் எதோ பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பது பொய் என்பதை நிரூபித்து விட முடியும்.
நாங்கள் சொல்லவில்லை
பாஜகவுடன் இணக்கமாக செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து விட்டு, அந்த முயற்சி பலிக்கவில்லை, எங்கள் தலைவர்கள் இவரை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஏதோ சிறுபான்மையினருக்கு பாதுகாவலரை போல ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் தினகரன். கன்னியாகுமரியை பொறுத்தளவில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்த சொல்ல எங்களுக்கு அவசியம் இல்லை. ஏனெனில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நலத்திட்ட பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் செய்து முடித்துள்ளார். எனவே, சிறுபான்மையினத்தை சேர்ந்த வேட்பாளரை போடுங்கள் என்று நாங்கள் கேட்க வேண்டிய தேவையில்லை. அவர் ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளார். எனவே இது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
வெளியே வரும் உண்மைகள்
ஒருபக்கம் கன்னியாகுமரி தொகுதியில் வலுவான சிறுபான்மையின வேட்பாளரை நிறுத்துமாறு பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது விட்டார், என்று தினகரன் குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜகவுடன் இணக்கமாக போவதற்கு தினகரன் தூது விட்டார் என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு கட்சியினரும் மாறி மாறி பல ரகசியங்களை வெளியே போட்டு உடைத்து வருகின்றனர். இன்னும் என்னென்ன திரைமறைவில் நடந்தது என்பது விரைவிலேயே வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.