தமிழ் தாய் படத்தில் ’ஸ’! கேள்வி கேட்டீர்களே.. முதல்வர் பெயரின் முதலெழுத்து என்ன? பாஜக அண்ணாமலை கேள்வி
சென்னை : தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்த நிலையில், தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதை அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார்.
மீண்டும் 'தமிழணங்கு’! முதல்வர் ஸ்டாலின் Vs பாஜக அண்ணாமலை! லைக்ஸ், ஷேர் போட்டியால் திணரும் ட்விட்டர்!
தமிழணங்கு சர்ச்சை
ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்துடன், 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே..' என்று பெருமையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்தார். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழணங்கே' என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் போட்டி
அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டது தமிழ்தாய் ஓவியமா அல்லது பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது தமிழ்தாய் ஓவியமா என விவாதம் எழுந்தது. மேலும் தமிழ் தாய் என தான் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தாய் என்று இருக்கக்கூடாது என திமுகவினர் விமர்சித்து வந்தனர். அதே நேரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்த தமிழ்தாய் ஓவியத்தில் அ, லா, ள உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களோடு வடமொழி எழுத்தாளர் "ஸ" என்ற எழுத்தும் இடம் பெற்றிருந்த நிலையில் அதனை ஜூம் செய்து குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்நிலையில் அண்ணமாலையை விமர்சித்திருந்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில்,"தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் 'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்"என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் என்று பதிவிட்டுள்ளார். இதனை இதனை திமுகவின் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணாமலை பதில்
இதற்கிடையே இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஸ வடமொழி எழுத்தென்றால் முதல்வர் பெயரில் இருப்பது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,"தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
உடனடியாக குழு
"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பாஜகவின் பலரும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி பதில்
இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி,"புரட்சியாளர் ஸ்டாலின் அவர்களின் நினைவாக எங்கள் தலைவரின் பெயர் உள்ளது! காரண பெயரினை மாற்ற முடியாது, தேவையும் இல்லை! அது உங்களை போன்ற ஆரிய அடிவருடிகளுக்கு புரிய வாய்ப்பில்லை! மைசூர் போண்டாவில் போண்டா இருக்கிறது மைசூர் எங்கே என கேட்பது போலுள்ளது உங்கள் அரசியல் அறிவு," என பதிவிட்டுள்ளார். இதனையும் பலர் ட்விட்டரில் ரீட்விட் செய்து வருகின்றனர்.