"ஏங்க.. அவரு அரசியல் சாசன பாதுகாவலர்.. ஆளுநர் பற்றி முரசொலி எழுதியது அவதூறு.." ஆவேசமான அண்ணாமலை
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நயினாரால் வந்த வம்பு.. பாஜக கேட்ட இடங்களை கொடுக்க தயங்கும் அதிமுக! இழுபறியில் முடிந்த பேச்சுவார்த்தை
திமுக கூட்டணி
இந்த நிலையில் அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர், பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய பல முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு இடபங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தில் இடபங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக சென்றது.
அதிமுக கடும் விமர்சனம்
இதில் நயினார் நாகேந்திரன் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததால் அவரை விட்டுவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், சுதாகர ரெட்டி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, டி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
3 மணி நேர பேச்சுவார்த்தை
அதிமுக- பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது. ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
இன்று அதிமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை தொடரும். இடபங்கீட்டில் எங்களது கோரிக்கைகள் என்பெதல்லாம் இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொருத்தமட்டில் நாங்கள் எதை கேட்டாலும் அதிமுக மாவட்ட செயலாளர்களை கேட்டுதான் அவர்கள் முடிவை சொல்ல முடியும். நாங்கள் கேட்கும் இடத்தில் இருக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளிட்டவைகளை ஆராய்ந்துதான் முடிவை சொல்ல முடியும்.
முரசொலி நாளிதழ்
எனவே விரைவில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து எத்தனை இடங்கள் என்பதை அறிவிப்போம். முரசொலி நாளிதழில் ஆளுநர் பற்றி எழுதியிருப்பது அவதூறு. அரசியல் சாசன பாதுகாவலரான ஆளுநர் பற்றி அவதூறு பரப்பியதை பாஜக கண்டிக்கிறது. ஆளுநர் ரவி சிறந்த காவல் துறை அதிகாரியாக இருந்து ஆளுநர் பதவிக்கு வந்தவர். நாகாலாந்து போன்ற பதற்றமான மாநிலத்தில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். எனவே நீதிபதிகள், ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சாசன பாதுகாவலர்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது. முரசொலியில் வைக்கப்பட்டது விமர்சனம் அல்ல, அது அவதூறு, இரண்டும் ஒரு கோடு அளவுக்குதான் வித்தியாசம் உள்ளது.