அந்த குழந்தைகளுக்கு என்ன தெரியும்.. டிவி சேனல் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. கொந்தளிக்கும் பாஜக!
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து நிகழ்ச்சி வெளியானதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர், நடிகைகள் நடுவர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி சிறுவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்டுவருகிறது. நாடகம், நடனம் என பத்து வயதுற்குட்பட்ட சிறுவர்களின் திறமைகள் இதில் வெளிப்படும். பெரும்பாலும் ஒரு நிகழ்வு குறித்து நாடகம் நகைச்சுவையாக இடம்பெறும்.
இந்தநிலையில், கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், இரண்டு சிறுவர்கள் பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததாக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தி பெருக்கோடு தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை
டிவி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் மறைமுகமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கிண்டலடித்திருப்பதாக இந்த நிகழ்ச்சி மீது விமர்சனங்களையும் கண்டனங்களையும் பாஜக-வினர் பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து டிவிட்டரில் பாஜக ஆதரவாளர்களும் எதிர் கருத்துடையோரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி
தமிழில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நடிகர் வடிவேலு மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை தழுவி இந்த நிகழ்ச்சியில், இரண்டு சிறுவர்கள் நகைச்சுவை நாடகம் ஒளிபரப்பானது. அதில், 'சிந்தியா'ன்னு ஒரு நாடு வரும் என தொடங்கி, பிரதமர் மோடியின் கருப்புப் பணம் நடவடிக்கை குறித்து மறைமுகமாக நையாண்டியாக பதிவு செய்திருந்தனர்.
நையாண்டி
மேலும், பிரதமர் வெளிநாடுகளுக்கு பயணிப்பதை கேலி செய்யும் உரையாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற நையாண்டி கலந்த உரையாடல்களே பாஜக-வை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
சிரிக்க..சிந்திக்க
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, அதை திமுக எம்.பி செந்தில்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதை 'சிரிக்க..சிந்திக்க..' என்று பகிர்ந்திருந்தார். இந்த டிவி நிகழ்ச்சிக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனத்தைப் பதிவு செய்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையும் அண்ணாமலை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
பகிரங்க மன்னிப்பு
இதையடுத்து பாஜக தரப்பில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், 'பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்களை வைத்து அரசியல் நோக்கத்துக்காக இப்படி நிகழ்ச்சி நடத்துவதையும் கண்டிக்கிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடிதம்
பாஜக ஐடி விங் தமிழக தலைவர் நிர்மல் குமார் தொலைக்காட்சியைக் கண்டித்து கடிதம் அனுப்பியுள்ளதில் மேலும் கூறியிருப்பதாவது ''உங்கள் தொலைக்காட்சியில் சிறுவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அதில் நடிகை சினேகா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், பிரதமர் நரேந்திரமோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
கருப்பு பணம் ஒழிப்பு குறித்தும், பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வது குறித்தும் அவதூறாக பேசி இருக்கிறார்கள். அதுவும் பத்து வயது குழந்தைகளை வைத்து இதை பேசி இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம்கூட தெரியாது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகளிடம் இதை கொண்டுசென்றிருக்கிறார்கள். ஆனால் நடுவர்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், அதை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்பட்டனர்.
அரசியல் நோக்கம்
நாடு முழுதும் தவறான செய்தியைக் கொண்டு செல்கிறது இது. தவறான செய்திகள் பரவாமல் இருக்க தொலைக்காட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் தொலைக்காட்சிதான். இதற்கு தொலைக்காட்சித்தரப்பு, இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்களை வைத்து அரசியல் நோக்கத்துக்காக இப்படி நிகழ்ச்சி நடத்துவதையும் கண்டிக்கிறோம்' என்று நிர்மல் குமார் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.