4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக
சென்னை: தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் தரப்படுகிறதாம்.
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, த.மா.கா ஆகிய கட்சிகள் உள்ள நிலையில் இப்போதே இட பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுத்தது அதிமுக.
மேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்?
4 மாநகராட்சிகள்
உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சிகளை கட்டாயம் தர வேண்டும் என அதிமுக தலைமைக்கு பாஜக தரப்பில் அழுத்தம் தரப்படுகிறதாம். இதனால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம்.
பாஜக லிஸ்ட்
கோவை, நாகர்கோவில், திருப்பூர், வேலூர் ஆகிய 4 மாநகராட்சிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்கு போட்டுள்ளது பாஜக. இதனால் அந்த 4 மாநகராட்சிகளையும் அதிமுகவிடம் இருந்து எப்படியாவது பெற வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகள் தீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்.
ஏமாற்ற முடியாது
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் சரியாக பயன்படுத்தி கட்சியை இன்னும் வலுவாக இங்கு கட்டமைப்போம். கடந்த எம்.பி.தேர்தலில், அதிமுக முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், இந்த தேர்தலில் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டு நாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் அதிமுக இடம் ஒதுக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
நேரடி பேச்சு
அமெரிக்கா சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தான் சென்னை திரும்பியுள்ளார். இதனால் ஓரிரு நாட்கள் கழித்து நேரடியாக அவரிடமே கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக பாஜகவினர் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.