பாஜகவினர் முற்றுகை, மோதல்.. "சிறுத்தைகள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.." திருமாவளவன் அதிரடி
சென்னை: மனுஸ்மிருதி பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி லைர் திருமாவளவன் தவறாக பேசியதாகவும், பெண்களின் மாண்புக்கு எதிராக திருமாவளவன் கருத்து கூறியதாகவும் அவர் மீது சைபர் கிரைம் போலீஸ் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருமாவளவனை கைது செய்யக் கோரி பல ஊர்களில் காவல்நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிதம்பரத்தில் குஷ்பு உள்ளிட்டோர் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் தனது நண்பரான டாக்டர் நவீன் பாலாஜி என்பவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் நேற்று சென்றார். இந்த தகவல் கிடைத்ததும், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் அந்தப் பகுதியில் ஏராளமாக கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டிருந்தனர்.
திருமாவளவன் கார்
இதையறிந்ததும், போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் கார் அந்த இடத்திற்கு வந்தபோது, பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் கோஷம் போட்டனர்.
போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல்
பிறகு இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதிக்கொள்ளும் நிலை உருவானது. அடுத்தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதனால் அந்தப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
முருகன் எச்சரிக்கை
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினர் சிலரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனித்தனியாக தங்க வைத்தனர். திருமாவளவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெண்களை தப்பாக பேசிய திருமாவளவனும், அதற்கு ஆதரவு அளிக்கும் ஸ்டாலினும் தெருவில் நடமாட முடியாது, பெண்கள் விடமாட்டார்கள் என பாஜக தலைவர் முருகன் நேற்று பேசியிருந்தார். இந்த நிலையில் இப்போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
சிறப்பு செய்தனர்
இதனிடையே திருமாவளவன் இந்த சம்பவம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சித்தோடு அருகே 6,7-சனாதனிகள் பெரியார்கொடி(!) பிடித்து வரவேற்றனர். நான் களிப்புப் பொங்க கையசைத்தேன். பின்னர் சிறுத்தைகள் அவர்களுக்குச் சிறப்புச் செய்தனர். கருப்பு நமக்குக் களிப்பு! இது யாவரும் அறிந்த உண்மை! இவ்வாறு தெரிவித்துள்ளார்.