ரூம் போட்டு யோசிச்சாங்களோ... 4 மாச நாய்க்குட்டியையே பாஜக தலைவர் முருகனுக்கு பரிசாக கொடுத்துட்டாங்க!
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடி பிறந்த நாளை எப்படியெல்லாம் வித்தியாசமாக கொண்டாட முடியுமோ அத்தனை வழிகளிலும் அசத்தித் தள்ளுகின்றனர்.
பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாள் விழாவை தமிழக பாஜகவினர் மிகுந்த எழுச்சியுடன் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடினர். 70 அடி நீள கேக். 70 கிலோ கேக்.. என்றெல்லாம் அதகளப்படுத்தினர் தமிழக பாஜகவினர்.
சோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு? துஷ்யந்த் கட்சி போர்க்கொடி
சென்னையில் மோடி பிறந்த நாள்
அதிலும் பாஜகவில் அண்மையில் இணைந்தவர்கள் காட்டிய அதீத வேகம் அடேங்கப்பா ரகம்! சென்னை உயர்நீதிமன்றம் அருகே இதேபோல் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜக வழக்கறிஞர் அணியின் தலைவர் பால் கனகராஜ் தலைமை வகித்தார். இங்குதான் நாய் ஒன்றும் கொண்டுவரப்பட்டு ஒரு நாற்காலி மீது நிறுத்தப்பட்டிருந்தது.
பாஜக நிர்வாகிகளும் நாய்க்குட்டி போட்டோவும்
சமூக வலைதளங்களில் தமிழக பாஜக நிர்வாகிகள் இந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் படம் நேற்று முதல் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இந்த நாய்க்குட்டி படத்தை முன்வைத்து வழக்கம் போல மீம்ஸ் மாமன்னர்கள் விளையாடி வந்தனர்.
மோடியின் மன்கிபாத் உரை
இந்த நிலையில் நாய்க்குட்டி படத்துக்கு நல்ல விளக்கம் தந்திருக்கின்றனர் பாஜகவினர்... அண்மையில் மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார். அப்போது தமிழகத்தின் சிப்பிப்பாறைவகை நாட்டு நாய் குறித்து சுட்டிக்காட்டினார் பிரதமர் மோடி. இந்த நாட்டு நாய்களைப் பாதுகாக்கவும் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிப்பிப்பாறை நாட்டு நாய்
பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று சிப்பிப்பாறை வகை நாட்டு நாய் இனத்தை காப்பாற்றும் வகையில் மோடியின் பிறந்த நாள் பரிசாக பாஜக தலைவர் எல். முருகனுக்கு இதை பாஜகவினர் கொடுத்திருக்கின்றனர். தமிழக காவல்துறையில் ஒப்படைக்கும் நோக்கத்துடன் இந்த சிப்பிப்பாறை குட்டி நாயை முருகனிடம் பரிசாக தந்தோம் என அதிரவைக்கின்றனர் பாஜகவினர்! நிச்சயம் ரூம் போட்டு யோசிச்சிருக்கனும் அல்லது 11 பேர் கொண்ட குழுவை போட்டிருக்கனும்!