3 மாதங்களில் 3வது தோல்வி.. பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது.. ப.சிதம்பரம் அதிரடி பேட்டி
Recommended Video
சென்னை: பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது என்றும், எதிர்க்கட்சிகள் இணைந்து களம் கண்டால் அந்த கட்சியை தோற்கடிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய மாநில தேர்தல் முடிவுகள் உதாரணம், என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. பிற்பகல் நிலவரப்படி மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில் 49 தொகுதிகளில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இதனால் பாஜக ஆட்சியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் நிருபர்களிடம் சென்னையில் அளித்த பேட்டி:
ஜார்க்கண்ட் மாநிலத்தை மட்டும் தனியாக பார்க்க முடியாது. கடந்த 3 மாதங்களில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளை சேர்த்தே பார்க்கவேண்டும். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தனிப் பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்தது.
மோடி, அமித்ஷாவின் திமிரை அழித்துவிட்டது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள்: என்சிபி நவாப் மாலிக்
மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பணபலம் மற்றும் அதிகார பலம் ஆகியவையும் பாஜக கட்சிக்கு இருக்கிறது. அத்தனை பலம் இருந்தும் ஹரியானாவில் 31 இடங்கள் தான் கிடைத்தது. 50 கிடைக்கும் என்று சொல்லி வந்தனர். ஆனால் நடக்கவில்லை. மகாராஷ்டிராவில் தனியாகவே 150 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் வலிமை கிடைக்கும் என்று சொன்னார்கள். மகாராஷ்டிராவில் 105 இடங்கள்தான் கிடைத்தது.
ஹரியானாவில், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆட்சி அமைத்துள்ளனர். அது நிலையான ஆட்சி இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆட்சி அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் புழக்கடை வழியாக ஆட்சி அமைக்க பாஜக முயன்றபோது தோற்கடிக்கப்பட்டது,
ஜார்க்கண்டில், இப்போது முழுமையான தோல்வியை பாஜக கண்டுள்ளது. பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு நாட்டுக்கு வந்தால், அநீதிகளை உணர்ந்து ஏறத்தாழ ஒரே அணியில் நின்றால், ஒவ்வொரு தேர்தலிலும், பாஜகவை தோற்கடிக்க முடியும், என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.