உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி? இரட்டை மனநிலையில் நிர்வாகிகள்
சென்னை: அதிமுக கூட்டணியில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாம் பாஜக.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் பலத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது பொன்.ராதா போன்றவர்களின் சிந்தனையாக உள்ளது.
ஆனால், அதிமுக கூட்டணியில் போட்டியிடுவதே பாஜகவுக்கு பாதுகாப்பு என்ற கருத்தும் ஒரு சில நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறது.
அதிமுக கூட்டணி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக விரும்பிய இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிமுக தலைமையகத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோரை சந்தித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனும், கே.டி.ராகவனும் பாஜக போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை அளித்துள்ளனர்.
அதிமுக பதில்
அந்த பட்டியலை வாங்கிப் பார்த்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி சொல்கிறோம் என பதில் அளித்துள்ளார்கள்.
தனித்துப் போட்டி
அதைக் கேட்டு அதிருப்தியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் அப்போதே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். மேலும், அதிமுகவிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என நினைக்காத பொன்னாருக்கு அது மிகுந்த ஏஎமாற்றத்தை அளித்ததாம். இருப்பினும், செய்தியாளர்களை சந்தித்த போது அதை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
அதிமுக கூட்டணி
இதனிடையே தமிழக பாஜக நிர்வாகிகள் ஒரு சிலர், அதிமுக கூட்டணியில் போட்டியிடுவதே கட்சிக்கு பாதுகாப்பு என்ற மன நிலையில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது பாஜக.