பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை! 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?
இதன் காரணமாக அவருக்கு ஏற்கனவே PSO எனப்படும் காவலர் ஒருவரை போலீசார் பாதுகாப்புக்கு அவருக்கு வழங்கி உள்ளனர்.
பாஜக நிர்வாகி
இதனிடையே இன்று இரவு நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து பாலச்சந்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
வெட்டி கொலை
பாலச்சந்தரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல், சாமி நாயக்கன் தெருவில் வைத்து பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இரவு நேரத்தில் பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றுள்ளார். அங்கு பாலசந்தர் நின்று அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
6 பேர் கொண்ட கும்பல்
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடி உள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை பாலசந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை
இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்து கொலையாளிகளின் தடயம் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் குவிப்பு
அப்பகுதியில் மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கக் கொலை நடந்த சுவாமி நயக்கன் தெரு, சிந்தாரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, சென்னை கிழக்கு இணை ஆணையர் பிரபாகரன் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் பகலவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பரபரப்பு
ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்தச் சூழலில் போலீஸ் பாதுகாப்பு இருந்த சூழலில், அதையும் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்து பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.