விசாரணை வளையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன்..? டெல்லி வரை எதிரொலித்த பேச்சு..!
Recommended Video
சென்னை: பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய நிலையில், இது தொடர்பாக அவரிடம் கட்சித் தலைமை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா நேற்று திருப்பூரில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை தாங்கி நடத்தி வைத்தார்.
அந்த விழாவில், பாஜக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அனைவரும் மனமக்களை வாழ்த்தி பேசிய நிலையில், பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் மட்டும் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.
மேலும், தங்களை வீழ்த்திய வெற்றித்தளபதி என்றும் குறிப்பிட்டார். இந்த ஒரு வரியை தான் தமிழக பாஜக தலைவர்களில் சிலர் கெட்டியாக பிடித்துக்கொண்டனர். அவர் எப்படி இப்படி பேசலாம்.. அமித்ஷாவையும், மோடியையும் நாள்தோறும் விமர்சிக்கும் ஒருவரை நமது கட்சிக்காரர் எதற்கு புகழ வேண்டும் என கொதித்துள்ளனர்.
எச்.ராஜா ஒன்று பேச.. சி.பி ராதாகிருஷ்ணன் வேறு ஒன்று சொல்கிறார்.. ஸ்டாலினால் பாஜகவில் வெடித்த பூசல்!
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான ரேஸ் நடக்கும் சூழலில், அதிலிருந்து சி.பி.ஆரை ஓரங்கட்டுவதற்கான பணிகளை ஒரு குழு கணக்கச்சிதமாக செய்துள்ளதாம். ராதாகிருஷ்ணன் பேச்சு பற்றி டெல்லி தலைமைக்கு நோட் அனுப்பப் பட்டுள்ளதாம். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் டெல்லியில் இருந்து விளக்கம் கேட்கவோ, அல்லது விசாரணை நடத்தவோ கூடும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே எங்க அண்ணன் எப்போது அரசியல் நாகரீகத்தை பின்பற்றுபவர், எதிர்தரப்பை கூட அன்பாலும், பண்பாலும் கவரக்கூடியவர். யதார்த்தமாக அவர் பேசியதை இங்குள்ள சிலர் திரித்து பேசி வருகின்றனர். கட்சிக்கு இவர் செய்த பணிகள் தலைமைக்கு தெரியும், அப்படியிருக்க தமிழக பாஜகவிற்கு நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் அண்ணனை பற்றி என்னத் தெரியும் எனக் கேட்கின்றனர் சி.பி.ஆர்.ஆதரவாளர்கள்.