கோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்!
சென்னை: தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கட்சி மேலிடத்துக்கு கோபமே இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதனால் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யவுள்ள பாஜக தமிழகத்தை சிறப்பாக கவனிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை கவனித்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் கொஞ்சமாவது சோபிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது பாஜக மேலிடம்.
இதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி?
கோதாவரி- காவிரி இணைப்பு
அதனால்தான் புதிய அரசு பதவி ஏற்பதற்குள்ளேயே தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி- காவிரி நதிகளை இணைப்பதே தனது முதல் பணி என தெரிவித்துள்ளார்.
கட்சி மேலிடம் கோபம்
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக படு தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் தமிழக பாஜக நிர்வாகிகளை மாற்றவும் பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
புறக்கணிக்கவில்லை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கத்து விட்டதாக ஒரு கருத்தை முன்வைத்து இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
எந்த கோபம் இல்லை
மேலும் மத்திய பாஜக தலைமை தமிழக பாஜக மீது கோபத்துடன் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி எந்தவித கோபமும் இல்லை. தமிழகத்தில் பாஜவிற்கு மட்டும் மல்ல நிறைய கட்சிகளுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை.
மோடி முடிவு செய்வார்
தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.